தேனியில் உருவாகும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி.. பூமி பூஜையில் துணை முதல்வர் பங்கேற்பு!
தேனி: தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிய நிலையில் இன்று பூமிபூஜை நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்த தப்புக்குண்டுவில் 253.64 ஏக்கரில் ரூ. 265 கோடி மதிப்பீட்டில், புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ளது. இந்த கல்லூரிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று பூமி பூஜை நடந்தது
இதற்காக நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் கல்லூரி கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். தொடர்ந்து, இன்று கல்லூரி அமையவுள்ள தப்புக்குண்டு பகுதியில், தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, கட்டுமான பணிகளை துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், அதிமுக எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்