மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை எதிரொலி..வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாக தொடர்ந்து மழை இல்லாததால் கும்பக்கரை அருவி வறண்டு காணப்பட்டது. கடந்த சில நாட்களாக மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து மண்ணையும் மக்கள் மனதையும் குளிர்வித்தது.
அந்த வகையில் தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோடை விடுமுறையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பித்து, மகிழ்ச்சியாக இருக்க கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சித்திரைப் பௌர்ணமி... அழகிய நிலவு.. அரிய நிகழ்வு.. குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இது குறித்து கருத்து தெரிவித்த சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு சென்று அங்கு குளித்து மகிழ்ச்சியாக இருக்க நினைத்து வந்தோம். ஆனால் அந்த அருவிக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிப்பதாக கூறினர். எனினும் தங்களது பாதுகாப்புக்காக தான் இந்த தடை என்று நினைத்து ஆறுதல் அடைவதாக கூறினர்.