செருப்பை கையில் ஏந்தி.. இன்னொரு கையில் வேட்டியை பிடித்து.. அக்கரைக்கு போய்.. மலைவாழ் மக்கள் ஹேப்பி!
மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஓபிஎஸ்
தேனி: ஒரு கையில் செருப்புடன், இன்னொரு கையில் வேட்டியை பிடித்து கொண்டு, ஓடிகொண்டிருக்கும் ஆற்றை கடந்து, மண்சாலையில் நடந்து சென்று.. போடி அருகே உள்ள மலைவாழ் மக்களின் தேவையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மேலப்பரவு கிராமம்... இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியை சுற்றி நெல், வாழை, கரும்பு தென்னை நிலம் உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த பகுதியின் குறுக்கே மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான குரங்கணி கொட்டகுடி ஆறு செல்கிறது.. ஆனால், மழைக் காலங்களிலும் பருவ மழை காலங்களிலும் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலை வந்தால், மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
இங்கு விளையும் விளைபொருட்களை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் விவசாயிகளும் எடுத்துச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, உடல்நலம் குன்றிய வயதானவர்கள், கர்ப்பிணிகளை இந்த ஆற்றை கடந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாமல் இன்னலுக்கு ஆளாகி வந்துள்ளனர்.. மேலும் தொடர் மழையால், வசித்து வரும் வீடுகளும் மிகுந்த சேதமாகி உள்ளன.. இந்த எல்லா பிரச்சனைகளையும் கோரிக்கையாக துணை முதல்வரிடம் மலைவாழ் மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
மேனகாவின் "லீலைகள்".. அப்பாவுடன் சேர்ந்து கணவர், மச்சினன், மாமனார்.. அடேங்கப்பா பெண்!
இந்நிலையில், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு திடீரென ஓபிஎஸ் விசிட் அடித்தார்.. நேரடியாகவே மலைவாழ் பகுதி மக்களிடம் சென்று என்னென்ன குறைகள் என்று கேட்டறிந்தார்.. பிறகு உடனடியாக 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார்
ஏற்கனவே ஓபிஎஸ் உத்தரவிட்டபடி அந்த பகுதிகளில் மோசமாக உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.. அதனால் அந்த பணிகள் எப்படி நடக்கின்றன என்பதையும் நேரில் சென்று பார்த்தார்... உடனடியாக சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இப்படி திடுதிப்பென துணை முதல்வர் வருவார் என்றுஅந்த பகுதி மக்கள் நினைக்கவே இல்லை.
நீண்ட நாட்களாக விடுத்த கோரிக்கை அனைத்துமே இன்று ஒரேநாளில் துணை முதல்வர் ஓபிஎஸ் முடித்து வைத்துவிட்டார். இந்த பகுதிக்கு செல்லும்போது, அந்த ஆற்றில் தன்னுடைய செருப்பை கழட்டிவிட்டார் ஓபிஎஸ்.. நிறைய சின்ன சின்ன பாறைகளும், கற்களும் அந்த ஆற்றில் சிதறி கிடந்தன.. அதனால் செருப்பை கையில் பிடித்து கொண்டு, இன்னொரு கையில் வேட்டியை பிடித்து கொண்டு பத்திரமாக இந்த பகுதிக்கு வந்து சேர்ந்தார்!