ஓபிஎஸ் மகன் மீது தேனிக்காரர்களுக்கு இம்புட்டு பாசமா.. மீண்டும் "மத்திய அமைச்சர்" ஆக்கினர்!
தேனியில் ரவீந்திநாத் குமார் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தேனி: தேனி தொகுதி அதிமுகவினருக்கு அப்படி என்னதான் அவசரமோ தெரியவில்லை.. தலைமை ஒரு முடிவு எடுக்கும் முன்னரே ரவீந்திரநாத்தை எம்பி ஆக்கி... மத்திய அமைச்சராக்கி... அழகு பார்க்க ஆரம்பித்து விட்டனர்!
தேனியில் வலுவான வேட்பாளர்களான அமமுகவின் தங்க தமிழ்செல்வன், காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன் இவர்களுக்கு இடையில் புதுவேட்பாளராக களமிறங்கினார் ரவீந்திரநாத்!
ஓபிஎஸ் மகன் என்ற ஒன்றை தவிர பெரிசா சொல்லி கொள்கிற அளவுக்கு ஒரு விஷயமும் அவரிடத்தில் இல்லை. ஒரு பெரும்புள்ளியின் மகன் ஊருக்குள் எப்படி பிரபலமாகுவார்களோ, அப்படித்தான் இவ்வளவு காலம் இருந்தார் ரவீந்திரநாத்! தனிப்பட்ட முறையில் கட்சி, தொகுதிக்கென பெரிய சாதனையும் இல்லை, பெரிய சரித்திரமும் இல்லை!
தேர்தல்தான் முடிஞ்சு போச்சே.. இனி இப்படித்தான்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல்
ஒற்றை நபர்
ஆனாலும் சீனியர்களை கீழே வீழ்த்திவிட்டு டாப் கியர் போட்டு மேலே வந்தார் ரவீந்திரநாத். அதுவும் அதிமுகவில் வெற்றி பெற்ற ஒற்றை நபர் என்ற பெருமையுடன். இவர் எப்படி வெற்றி பெற்றார் என்ற சர்ச்சை இன்றுவரை நீண்டு வருகிறது. ஆனால் இதை பற்றியெல்லாம் தேனி அதிமுகவினர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
கல்வெட்டு
ரிசல்ட் வருவதற்கு முன்பாகவே அதாவது போன 16-ந்தேதியே சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அது எப்படி ஓட்டுக்களை எண்ணாமலேயே எம்பி என்று பெயர் பொறிக்கலாம் என சர்ச்சை வெடித்தது, எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.. அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது!
நன்றி சொல்லும் போஸ்டர்
இதையடுத்து அடுத்த சர்ச்சை ஆரம்பமானது. தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாம். ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி சொல்வதற்காக அடிக்கப்பட்ட போஸ்டர் அது! வெறுமனே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சொல்லிவிட்டு போகாமல், மத்திய அமைச்சர் என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ளதுதான் வினையே! இது சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அமைச்சர்
இது மட்டுமில்லை.. இந்த சர்ச்சையோடு இன்னொரு சர்ச்சையும் கைகோர்த்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இதற்கான அழைப்பிதழிலும் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு அருகில் மத்திய அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அழைப்பிதழ் போலி என்று சொல்லப்படுகிறது.
போலி அழைப்பிதழ்
ஏனெனில் கிராம மக்கள் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாராளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே உள்ளது. யாரோ சிலர், இதனை மாற்றி மத்திய அமைச்சர் என சேர்த்து போலியாக சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளதாக தெரிகிறது.
தொடரும் சர்ச்சை
இந்த அழைப்பிதழ் உண்மைதானா என்பது குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தாலும் ஒருத்தர் பதவிக்கு வருவதற்கு முன்பே பலவாறாக சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருவது பரபரப்பைதான் ஏற்படுத்தி உள்ளது.