தர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்.. டென்ஷன் படுத்தும் ஓ.பி.எஸ்.மகன்..!
Recommended Video
தேனி: ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமாரை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசியதை தங்க தமிழ்ச்செல்வன் ரசிக்கவில்லையாம்.
அதிமுக மற்றும் அமமுகவில் கோலோச்சிய தங்க.தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அண்மையில் திமுகவில் இணைந்தார். தான் இணைந்ததோடு மட்டுமின்றி தனது ஆதரவாளர்கள் பத்தாயிரம் பேரையும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்தார்.
இந்நிலையில் சட்டசபை பொதுகணக்கு குழுத் தலைவர் என்ற முறையில் தேனி மாவட்டத்திற்கு ஆய்வுக்கு சென்ற துரைமுருகன், அங்கு ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு தங்க.தமிழ்ச்செல்வனை டென்ஷன் ஆக்கியதாம்.
அரட்டை
''இவரு எவ்வளவு பெரிய சீனியர்..சின்னப்பையனிடம் போய் அரட்டை அடிக்கிறார்'' என தனது ஆதரவாளர்களிடம் தங்க.தமிழ்ச்செல்வன் வருத்தத்தை வெளிப்படுத்தினாராம்.
டென்ஷன்படுத்த புகைப்படம்
துரைமுருகனுடனான சந்திப்பின் போது தங்க தமிழ்ச்செல்வனின் பி.பி.யை எகிற வைக்க வேண்டும் என்றே சிரித்து..சிரித்து..பேசிக்கொண்டிருப்பது போல் புகைப்படம் எடுக்க வைத்தாராம் ஓ.பி.ஆர்.. இதன் மூலம் தனது செல்வாக்கு என்ன என்பதை உள்ளூர் அரசியல் எதிரி தங்க.தமிழ்ச்செல்வனுக்கு புரிய வைத்துவிட்டார் அண்ணன் என்கின்றனர் அவரது ஆதரவளர்கள்.
தர்மசங்கட தங்கம்
ஓ.பி.எஸ். மகன் - துரைமுருகன் சந்திப்பை பற்றி தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பதால், அவர்களுக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளாராம் தங்கம்.
உடன்பாடில்லை
இதனிடையே எங்களுக்கு கூட அந்தச் சந்திப்பில் உடன்பாடில்லை தான், தேனி மாவட்டத்தில் திமுகவை அழிக்க அத்தனை வழிகளையும் அப்பாவும், மகனும் கையாண்டு வருகின்றனர். இதைக் கூட அவர் புரிந்துகொள்ளவில்லையே என கோரஸ் பாடுகின்றனர் தேனி மாவட்ட திமுகவினர்.