குட்டிக்கரணம் அடித்தாலும் சரி... ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வாய்ப்பில்லை... ஈவிகேஎஸ் இளங்கோவன்
தேனி: தேனி மக்களவைத் தொகுதியில் தமது மகனை வெற்றிபெற வைக்க முயற்சிக்கும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், குட்டிக்கரணம் அடித்தாலும் வெற்றி பெற முடியாது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலசமுத்திரம் கிராமத்திலும், பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குசாவடிகளை காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறுவாக்குப்பதிவு தேனி மாவட்டத்தில் தேவை இல்லாத ஒன்று. ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமாரை டெபாசிட் வாங்க வைக்கவே தேனியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதாக கூறினார். தமது மகனை வெற்றிபெற வைக்க, ஓபிஎஸ் மோடியின் காலில் விழுந்ததாகவும் தெரிவித்தார்.
2000 நோட்டு.. ஆர்கே நகர் பாணி டோக்கன் சிஸ்டம்.. செந்தில்பாலாஜி மீது செந்தில் நாதன் பகீர்
மறுவாக்குப்பதிவுக்காக மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுக்காத நிலையில், துணை முதல்வரின் சூழ்ச்சியாலேயே மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடுகப்பட்டி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளது குறித்து தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார். கோயில் கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்ட விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.