முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு... நெற்பயிர்கள் கருகும் அபாயம்... விவசாயிகள் கலக்கம்
தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் பாசனத்துக்கான நீரை நம்பி உள்ள விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் முல்லை பெரியாறு அணை நீரை குடிநீருக்காகவும், பாசனத்துக்காகவும் நம்பி இருக்கிறார்கள்.
வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு பொய்த்து போனதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நெற்பயிர் சாகுபடி
இந்த அணையின் நீரை நம்பி இரண்டாம் போக பாசனத்தை பல ஆயிரம் ஏக்கரில் கம்பம் பள்ளத்தாக்கில் விவசாயிகள் நெற் பயிரை சாகுபடி செய்துள்ளனர்.
பயிர்களை காப்பாற்ற நீர் தேவை
ஆனால், கோடை வெயில் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 116.45 அடியாக குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இன்னும் 40 நாட்களுக்கு அணையில் இருந்து நீர் திறந்தால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற சூழலில் அத்தனை நாட்களுக்கு நீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அணையில் நீர் இருப்பு
கடந்த டிசம்பரில் அணையின் மொத்த நீரின் கொள்ளவு 3,000 மில்லியன் கன அடியாக இருந்தது. தொடர்ந்து நீர் இருப்பு சரிந்ததால் நேற்று முல்லை பெரியாறு அணையின் நீர் இருப்பு 2,015 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.
108 அடிக்கு கீழ் சரிவு
அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 300 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 108 அடிக்கு கீழ் சரிந்தால் நீரினை எடுக்க இயலாது. எனவே அணையில் 40 நாட்களுக்கு நீர் வெளியேறுவதற்கு தற்போதைய சூழலில் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
குடிநீருக்கு அபாயம் இல்லை
இதனிடையே, அணையில் தொடர்ந்து நீர்மட்டம் சரிந்தாலும் தேனி, மதுரை, உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்கும். ஏனெனில் வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு மேல் இருப்பதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.