கல்யாணம் செய்ய சொன்ன ஒற்றை பொய்.. கலங்கி போன மிலிட்டரி மகள்.. எஸ்பி ஆபீசில் கதறல்
தேனி: கல்லூரி விரிவுரையாளரென மோசடி செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக இளம் பெண், கை குழந்தையுடன் சென்று தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பெத்தானியா தெருவில் வசிப்பவர் இஸ்ரேல். எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரது மகள் பிரேமா (வயது 26). தனது ஆறுமாத கைக்குழந்தையுடன் தேனி எஸ்பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எம்சிஏ முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளேன். சென்னையில் உள்ள ஹெச்பி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிய போது எனக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள்., வரன் பார்த்தார்கள்.
திருமணம் நடந்தது
அப்போது பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சித்த மருத்துவர் ஞானம் மகன் பிரவீன் குமார் பெரியகுளத்தில் உள்ள மாலைநேரக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுவதாகவும், மாதம் சம்பளமாக 27000 வாங்குவதாகவும் கூறி எனக்கும் அவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது.
வேலைக்கு போகவில்லை
திருமணத்தின் போது 40 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருள்கள் கொடுத்தோம். திருமணமாகி எனது கணவர் ஆறுமாதமாக வேலைக்கு செல்லவில்லை.அதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனிடையே எனது கணவர் விரிவுரையாளராக பணிபுரிகிறாரா என்பதில் சந்தேகம் எழுந்தது.
கல்லூரியில் வேலையும் இல்லை
இதனால் என் கணவர் பிரவீன்குமார் வேலை செய்வதாக கூறிய மாலைநேரக் கல்லூரிக்கு சென்று விசாரித்தேன். அப்போது தான் அவர் இளங்கலை படிப்புகூட முடிக்கவில்லை என்பதும், கல்லூரியில் வேலை பார்க்கவில்லை என்பதும் தெரியவந்தது.
எஸ்பியிடம் புகார்
இதுகுறித்து பிரவீன்குமாரிடம் கேட்டேன். அவர் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே கல்லூரி விரைவுரையாளர் என கூறி நம்பிக்கை மோசடி செய்த பிரவீன்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் கதறினார். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.