மதுரையை தொடர்ந்து தேனியில் முழு லாக்டவுன் தீவிர அமல்- பெரும்பாலான கடைகள் அடைப்பு
தேனி: கொரோனா பாதிப்பு அதிகமானதால் மதுரையை தொடர்ந்து தேனியிலும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவியதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2-வது கட்டமாக மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதேபோல் மதுரையிலும் தீவிர லாக்டவுன் அமலில் உள்ளது.
மீண்டும் சாட்டையை சுழற்றும் போலீஸ்... வாகன ஓட்டிகள் மீது அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?
தேனியில் முழு லாக்டவுன்
இதனையடுத்து தேனி மாவட்டத்திலும் கொரோனா பரவலைத் தடுக்க நேற்று மாலை முதல் தீவிர லாக்டவுன் அமலில் உள்ளது. தேனிமாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தீவிர வாகன சோதனை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
சாலைகள் வெறிச்சோடின
தேனியில் வாகனப்போக்குவரத்துக்கு முழு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மதுரை மாவட்டத்துக்கான பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. திண்டுக்கல் மாவட்டத்துக்கு குறிப்பிட்ட அளவு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.
அரசு அலுவலகங்களில் பாதிப்பு
இதனிடையே தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறை இருக்கும் வட்டாட்சியர் அலுவலக வளாகங்கள் மூடப்பட்டன. மேலும் சப் ஜெயிலில் உள்ளவர்கள் ,வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி செய்து வருபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தேனி கோட்டாட்சியர் அலுவலகம்
இந்த நிலையில் உத்தமபாளையத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அதே வளாகத்தில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டன.