பட்டியல் இனத்தில் இருந்து நீக்கினால் போதும்.. எந்த சலுகையும் தேவையில்லை.. கிருஷ்ணசாமி பேட்டி
தேனி : சம உரிமையும் சம வாய்ப்பு அனைவருக்கும் ஜாதி மத பேதமின்றி இருக்க வேண்டும் என்பது தேவேந்திரகுல வேளாளர்களின் விருப்பம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறுகையில், "சம உரிமையும் சம வாய்ப்பு அனைவருக்கும் ஜாதி மத பேதமின்றி இருக்க வேண்டும் என்பது தேவேந்திரகுல வேளாளர்களின் விருப்பம்
இந்திய அரசு பட்டியல் இனத்தில் இருந்து (SC பிரிவிலிருந்து) எங்களை நீக்கினால் மட்டும் போதும் எந்த சலுகையும் தங்களுக்குத் தேவையில்லை அனைத்து மக்களும் கிடைக்கும் சமமான சலுகை மட்டும் கிடைத்தால் போதும். தேவேந்திரகுல வேளாளர்கள் திறமைக்கு ஏற்ப சமுதாயத்தில் தாங்களாகவே உயர்ந்து கொள்வார்கள்.
திராவிட கட்சிகள்
திராவிட கட்சிகளின் கொள்கைகள் அனைத்தும் தவறானவை சம உரிமை என்பதில் உள்ள கொள்கையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் பெரியாரை முன் நிறுத்துவதை காட்டிலும் அவரை முழுவதுமாக புரிந்து அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பட்டியல் வெளியேற்றம்
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய அரசாணை முழுமை அடைய வேண்டுமென்றால் வரும் மார்ச் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற விவாதத்தில் தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து நீக்கினால் மட்டுமே முழுமை அடையும். முழுமையடையாமல் தொடர்ச்சியாக முழுமை அடைவதற்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
பேச வேண்டும்
நாங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இணையில்லை அவர்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளோம்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கைகளை பேச வில்லை என்று தெரிவிக்கவில்லை. அவர் பாராளுமன்றத்தில் இதுகுறித்து பேச வேண்டும் என்றுதான் கூறினோம்.
தேர்தல் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக மார்ச் இறுதிக்குள் மாவட்ட மாநாடுகளை நடத்தி வருகிறோம். தேர்தலைப் பற்றி தற்போது நாங்கள் சிந்திக்கவில்லை எங்களது குறிக்கோள் பட்டியல் இணையத்தில் இருந்து வெளியேறி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை அறிவிப்பில் தான் உள்ளது. அதன்பின் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் தேர்தல் பற்றி சிந்திப்போம்" இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.