நான் ரெடி.. நீங்க ரெடியா.. தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓபிஎஸ் இளைய மகன் சவால்
தேனி: தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் என்னுடன் கேரளா வந்து எங்களுக்கு சொத்துக்கள் இருக்கிறதா என்பதை நிரூபிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அரசியலைவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப், சவால் விடுத்துள்ளார்.
அண்மையில் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ் செல்வன், ஓபிஎஸ் குடும்பத்திற்கு ஆயிரம் ஏக்கரில் கோடிக்ககண்க்கில் சொத்து உள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதனை கண்டித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
கண்டிக்கிறேன்
'தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாங்கள் கேரள மாநிலத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளோம் என்று அங்கு ஒரு மஞ்சள் பத்திரிகையில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி பொய் குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஏமாளிகளாக
அவர் ஒவ்வொரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் தமிழக மக்களையும் பத்திரிக்கை நண்பர்களையும் ஏமாளிகள் என்று நினைத்துக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
அவருடன் வர தயார்
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இதோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். கேரள மாநிலத்தில் அவர் கூறிய அந்த இடத்திற்கு நான் அவருடன் வரத் தயாராக இருக்கிறேன். எங்களுடன் அவர் பேட்டி கொடுத்த பத்திரிக்கை நண்பர்களும் சாட்சியாக உடன் வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சொத்துக்களை கொடுக்கிறேன்
தாங்கள் கூறிய அந்த இடத்தில் நாங்கள் உண்மையாகவே சொத்து சேர்த்து இருக்கிறோம் என்று ஆதாரப்பூர்வமாக ஒரு சதுர அடி அளவு கூட நிலம் இருக்கிறது என்று நிரூபித்து விட்டால் நான் எனது சொத்துக்கள் முழுவதையும் அவரிடம் கொடுத்து விடுகிறேன்.
தங்க தமிழ்ச்செல்வனுக்கு சவால்
அப்படி அவர் கேரள மாநிலத்தில் எனக்கு சொத்துக்கள் இல்லை என்று நிரூபிக்கத் தவறினால் இனிமேல் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும், அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டும். இதற்கு அவர் தயாராக இருக்கிறாரா என்பதை பத்திரிக்கையாளர்கள் கேட்டுச் சொல்ல வேண்டும். நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாராக இருக்கிறாரா?" இவ்வாறு ஜெயபிரதீப் சவால் விடுத்துள்ளார்.