சுடுகாட்டில் அரிசி.. திரண்டு வந்து சட்டியுடன் வந்து அள்ளி சென்ற மக்கள்.. தேனியில் ஒரே பரபரப்பு
போடி சுடுகாட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தேனி: தேனி மாவட்டம் போடி சுடுகாட்டில் குவியல் குவியலாக ரேஷன் அரிசி கொட்டப்பட்டிருந்தது.. யார் இந்த வேலையை செய்தது என்று தெரியவில்லை.. ஆனால் சுடுகாட்டுக்கு வந்து, கொட்டப்பட்ட ரேசன் அரிசியை பொதுமக்கள் போட்டி போட்டு தங்களது வீடுகளுக்கு அள்ளி சென்றனர்!
Recommended Video
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.. மக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. இதனால் பல்வேறு தரப்பினர் வேலையின்றி உள்ளனர்.. குறிப்பாக தொழிலாளிகள், விவசாயிகள் வறுமையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏழை, எளிய மக்களுக்கு சரியான உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.. இந்நிலையில், தேனி மாவட்டம் போடி மயானம் அருகே அரிசி மூட்டைகள் கிடந்தன.. சுடுகாட்டிலேயே மூட்டை மூட்டையாக அரிசி மூட்டைகள் கிடந்ததுடன், அரிசி கொட்டப்பட்டும் கிடந்தது.
பிரிக்காத அரிசி மூட்டைகள் ஒரு பக்கமும், குவியலாக அரிசி ஒரு பக்கமும் இருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்... பிறகு இந்த தகவல் அக்கம் பக்கம் பகுதிகளிலும் பரவியது.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக சுடுகாட்டுக்கு வந்து அரிசியை வீடுகளுக்கு அள்ளி சென்றனர்.. ஆனால் அந்த அரிசியில் புழுக்கள் இருந்தன.. கெட்டுப் போய் இருந்தது.
இருந்தாலும் மொத்தமாக ஆளாளுக்கு அள்ளி கொண்டு போனார்கள்... சுடுகாட்டில் ரேஷன் அரிசியை இப்படி கொட்டியவர்கள்? ஏன் கொட்டினார்கள்? என்று தெரியவில்லை.. இது சம்பந்தமாக தேனி மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.