தேனியில் ஒபிஎஸ் மகனுக்கு எதிராக சவால்விட்டு களம் இறங்கி காணாமல் போன தங்கதமிழ்செல்வன்
Recommended Video
தேனி: தேனி மக்களவை தொகுதியில் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் சவால் விடுத்து போட்டியிட்ட போதிலும் படுதோல்வி அடைந்தார்.
தேனி மக்களை தேர்தலில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டார். அவர் அறிவிக்கப்பட்டதை தொலைக்காட்சிகளில் பார்த்த அடுத்த நொடியே தேனியில் போட்டியிடுவதென தங்கதமிழ்செல்வன் முடிவு செய்தார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் கூறியுள்ளார். இதை கேட்டு சந்தோஷம் அடைந்த அவரும் நீங்களே போட்டியிடுங்கள் என்றார்.
இதனால் ஆண்டிபட்டியில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி என்ற நிலையை ஏற்படுத்தி வைத்திருந்த தங்கதமிழ்செல்வன் தேனி மக்களவை தொகுதியில் திடீரென போட்டியிட்டார்.
மூத்த தலைவர்களின் அரும்பணிகளால் சாத்தியமான வெற்றி.. அத்வானியிடம் ஆசி பெற்ற மோடி கருத்து
கடும் போட்டி
இதனால் பிரச்சாரம் கடுமையாக இருந்தது. தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், சோழவந்தான், கம்பம், போடி என எல்லா பக்கமும் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக வாக்கு சேகரித்தார் தங்கதமிழ்செல்வன். தேர்தல் நெருங்கும் வேளையில் கூட தாம் தான் அங்கு வெற்றி பெற போகிறோம் என்ற மனநிலையில் இருந்தார்.
வெற்றி எளிதல்ல
அதன்படி தேர்தலும் தேனியில் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடந்து முடிந்தது ஆனால் தங்கதமிழ்செல்வன் நினைத்தபடி முடிவுகள் அமையவில்லை. ஏன் மிகப்பெரிய அரசியல் செல்வாக்குடன் களம் இறங்கிய ஒ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கே வெற்றி அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஏனெனில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் போட்டியை கொடுத்தார்.
கடைசியல் முன்னணி
எனினும் ஒட்டு எண்ணிக்கை சுற்றுகள் செல்ல செல்ல ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிக வாக்குகள் முன்னணி பெற்று முன்னேறிக்கொண்டே இருந்தார். கடைசியில் ரவீந்திரநாத்குமார் 5 லட்சத்து 4 ஆயிரத்து 814 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அமமுக டெபாசிட் இழப்பு
.இவரை எதிர்த்து போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 4லட்சத்து 28 ஆயிரத்து 120 வாக்குகள் பெற்றார். அமமுகவின் தங்கதமிழ்செல்வன் வெறும் 1 லட்சத்து 44 ஆயிரத்து 50 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். மக்களவை தேர்தலில் அமமுகவின் அனைத்து வேட்பாளர்களுமே டெபாசிட் இழந்துள்ளனர். இது நிச்சயம் அமமுகவுக்கு பெரும் சறுக்கல் தான்.