வாங்க சார், வாங்க மேடம்... பரோட்டா 1 ரூபாய்.. பிரியாணி 10 ரூபாய்.. திக்குமுக்காடிய கூட்டம்
தேனி: ஜவுளிக் கடை, உணவகங்கள், செல்போன் கடை போன்றவைகள் புதியதாக திறக்கப்படும் போது, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில், புதிய ஜவுளிக்கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக புதிய உத்தியை கையாண்ட ஜவுளிக்கடையினர், முதலில் வரும் 599 பேருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை வழங்குவதாக அறிவித்தனர். இதனால், அப்பகுதியே கூட்டத்தால் திக்குமுக்காடியது.
அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு பரோட்டாவும், பத்து ரூபாய்க்கு பிரியாணியும் வழங்கியதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பெரியகுளம் பவளம் தியேட்டர் அருகே புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று திறப்பு விழா சலுகையாக ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அந்தக் கடையில் குவியத் தொடங்கினர். பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு குவியும் கூட்டம், போல் இருந்தது. கட்டைகளால் தடுப்புகள் கட்டப்பட்டு இருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.