தேடிவந்து சந்தித்த எம்எல்ஏக்கள்.. 7ம் தேதி ஓ பன்னீர்செல்வம் சென்னை வருவாரா? பரபரக்கும் அதிமுக
தேனி: அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சைகளுக்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் அமைச்சர் உதயகுமார் மற்றும் 4 எம்எல்ஏக்கள், ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான இந்த அரசியல் சூழலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 7.45 மணியவில் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு காரில் வந்தார். அவரை தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றார்கள்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளார்.. நேற்று காலை 11 மணி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. அவரை விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாநில பொதுச்செயலாளர் முனீஸ்வரன், திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆணையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜசேகரன், சிவகங்கை மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா, சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் சின்னையா அம்பலம், விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் நாகராஜன், அருப்புக்கோட்டை நகர மகளிர் அணி செயலாளர் பிரேமா, திருவண்ணாமலை மகளிர் அணி வடக்கு மாவட்ட செயலாளர் இந்திரா பாலமுருகன் உள்ளிட்ட பலர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு 2 மணி நேரம் சத்தியாகிரகப் போராட்டம்... தமிழக காங்கிரஸ் கமிட்டி அறைகூவல்.!
4 எம்எல்ஏக்கள் சந்திப்பு
இதேபோல் நேற்றிரவு அமைச்சர் உதயகுமார், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.. இந்த ஆலோசனை ஒரு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் பேசிய அமைச்சர் உதயக்குமார், உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை அமைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார். வேறு எந்த நோக்கமும் இதில் இல்லை என்றார்.
அதிமுகவில் பரபரப்பு
எனினும் தற்போது மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் மட்டுமே வந்து சந்தித்த நிலையில் விரைவில் மேலும் பல எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வேட்பாளர் விவகாரத்திற்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்து வருதால் இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 2 நாளில்
வருகிற 7ம் தேதிக்குள் 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் நிபந்தனை வைத்திருப்பதாகவும், அப்படி அமைத்தால்தான் முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு தான் வருவேன் என்று பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 7ம் தேதிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், அதிமுகவில் பரபரப்பு உருவாகியுள்ளது.
தேனியில் விழா
ஏனெனில் தேனி மாவட்டம், நாகலாபுரத்தில் நாளை காலை அரசு கடனுதவி வழங்கும் விழாவிலும், அரசு செல்போன் வழங்கும் விழாவிலும் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். இதனால் இதுவரை சென்னைக்கு வருவது குறித்து அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட வரும் 7ம் தேதி அவர் சென்னைக்கு வருவாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. 7ம் தேதிக்குள் சமரசம் ஏற்பட்டால் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்டுவார் என்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஒபிஎஸ் வழிபாடு
இதனிடையே . புரட்டாசி 3ம் சனிக்கிழமை என்பதால், நேற்றிரவு பெரியகுளத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஓபிஎஸ் சென்று, சாமி தரிசனம் செய்தார். இதேபோல் வத்தலகுண்டுவில் உள்ள சென்றாயப்பெருமாள் கோவிலுக்கு சென்று துணை முதல்வர் ஓபிஎஸ் சுவாமி தரிசனம் செய்தார். முதல்வர் வேட்பாளர் சர்ச்சைகள் குறித்து இதுவரை முதல்வரோ துணை முதல்வரோ இதுவரை வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கிறது சசிகலா விடுதலை ஆகும் முன்பு முதல்வர் யார், கட்சியில் அதிகாரம் யாருக்கும் என்பதைற்கு தீர்வை எட்ட வேண்டும் என்பதில் இரு தரப்பும் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.