மக்னா யானையின் தொடர் மனித வேட்டையும் - மாவட்ட வனத்துறையின் கும்கி சர்க்கஸும்
தேனி: தேனி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திரியும் ஒற்றை யானை மக்னா இரவு நேரங்களில் ஊருக்குள் இறங்கி விவசாயிகளின் விளை பொருட்கள் அனைத்தையும் நாசம் செய்வதுடன் அவர்கள் அமைத்துள்ள குடில்கள் மற்றும் அவர்கள் வைத்துள்ள பொருட்களையும் அடித்து நாசம் செய்வதோடு மனிதர்களையும் அடித்துக் கொல்கிறது. இதுவரை இந்த யானையின் மனித உயிர்ப் பசிக்கு பலியாகி உள்ளோர் எண்ணிக்கை பத்துக்கும் மேலே என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.10க்கும் மேற்பட்டோரை அடித்து கொன்று விட்டு இன்று வரை இப்பகுதியில் கம்பீரமாய் வலம் வந்து கொண்டிருக்கிறது மக்னா.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமம் தேவாரம், கேரள தமிழக எல்லைப் பகுதியாகும். தேவாரத்திலிருந்து சாக்கலூத்து மெட்டு வழியாகவும் சதுரங்கபாறை மெட்டு வழியாகவும் கேரளாவுக்கு இரண்டு மணி நேரத்தில் நடந்து சென்று விடலாம். சோழநாயக்கன்பட்டி என்று அழைக்கப்படுகிற டி.ரங்கநாதபுரம், தேவாரம், டி.மேட்டுப்பட்டி, மல்லிங்காபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் கப்பை கிழங்கு சோளம், தென்னை, மக்காசோளம், போன்றவை அதிகமாக பயிரிடப்படுகிறது.
காட்டு விலங்குகளிடமிருந்தும், களவு மனிதர்களிடமிருந்தும் தங்கள் விளைபொருட்களை காப்பதற்காக ஒவ்வொருவரும் தங்கள் தோட்டங்களில் இரவுக் காவலுக்கு குடில்கள் அமைத்து உறங்குவது வழக்கம். கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பகலில் விவசாயம் செய்து இரவு நேரங்களில் தோட்டங்களில் நிம்மதியாக உறங்கித் தான் வந்திருக்கிறார்கள் மக்னா யானையின் வரவுக்கு முன்னதாக, அதன்பிறகு உறக்கம் தொலைந்து திரிகிறார்கள் மக்கள்.
ச்சை! பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விட்டுவைக்க மாட்டீங்களாடா.. கஸ்தூரியின் காரசார ட்வீட்
மக்னாவால் பறிபோன உயிர்கள்
கடந்த 10 ஆண்டுகளாக இந்த மலைப் பகுதிகளில் திரியும் ஒற்றை யானை மக்னா, இந்த யானை இரவு நேரங்களில் ஊருக்குள் இறங்கி விவசாயிகளின் விளை பொருட்கள் அனைத்தையும் நாசம் செய்வதுடன் அவர்கள் அமைத்துள்ள குடில்கள் மற்றும் அவர்கள் வைத்துள்ள பொருட்களையும் அடித்து நாசம் செய்து வந்தது, உச்சகட்டமாக மனிதர்களையும் அடித்துக் கொல்லத் துவங்கியது. இதுவரை இந்த யானையின் மனித உயிர்ப் பசிக்கு பலியாகி உள்ளோர் எண்ணிக்கை பத்துக்கும் மேலே என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.10க்கும் மேற்பட்டோரை அடித்து கொன்று விட்டு இன்று வரை இப்பகுதியில் கம்பீரமாய் வந்து வழக்கம் போல் விவசாயிகளுடைய பயிர்களையும், உயிர்களையும் நாசம் செய்து சென்று கொண்டிருக்கிறது இந்த மக்னா யானை.
விவசாயிகள் கண்ணீர்
ஒவ்வொரு முறை உயிர்பலி ஏற்படும் போதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்த யானையை பிடித்து வேறு பகுதியில் விடவேண்டும் அல்லது சுட்டு பிடிக்க வேண்டும் என்று பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தும் இதுவரை எந்த பலனும் இல்லை என்பதே உண்மை. கடந்த 10 ஆண்டுகளாக இருந்த மாவட்ட ஆட்சியர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் கடுகளவும் எடுக்காத சூழலில் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவராக உள்ள பல்லவி பல்தேவ் கும்கி யானைகள் மூலம் மக்னா யானையை விரட்டும் முயற்சியை மேற்கொண்டார்.
கும்கி வரவு
கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தோட்டக் காவலுக்கு இருந்த சேகர் என்ற விவசாயி மக்னா யானையால் அடித்துக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் பொது மக்கள் பொங்கி எழுந்ததால் மாவட்ட வன அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் ஆலோசனையின் பேரில் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதிகளில் இருந்து இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டது. இந்த யானைகள் தேவாரம் மலை அடிவாரத்தில் கட்டி வைக்கப்பட்டு சில நாட்களில் திரும்பி கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்பு மீண்டும் மக்னா யானை நடமாடத் துவங்கியதால் மீண்டும் கலில் மற்றும் மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.
தேடும் முயற்சி இல்லையே
சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக இந்த யானைகள் தேவாரம் மலை அடிவாரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மக்னா யானையை தேடும் முயற்சி கடுகளவும் செய்யப்படவில்லை. இந்த இரண்டு கும்கி யானைகளின் உணவு செலவு மற்றும் இதை பராமரிப்பவர்கள் செலவு என்று பல லட்சங்கள் வரை விரயமாக்கப்பட்டதை தவிர வேறு எந்த பலனும் இல்லை. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த யானையை வந்து வேடிக்கை பார்க்கத் துவங்கியதுடன் இந்த யானை பாகன்கள் உதவியுடன் செல்பி எடுக்கவும், குழு புகைப்படம்,தனி புகைப்படம் என்று வகைவகையான புகைப்படங்கள் எடுக்க மட்டுமே உதவியது.
பாகன்களுக்கு வசூல்
புகைப்படத்திற்கு 50 ரூபாய் வீதம் இந்த யானை பாகன்கள் வசூல் செய்து வருமானம் பார்த்து விட்டனர் என்பதுதான் வேதனையான உண்மை. ஒரு மாத காலத்திற்கும் மேலாக இருந்து பல லட்சங்களை விரயம் செய்துவிட்டு இந்த பகுதியில் யானை நடமாட்டம் இல்லை என்று கூறிவிட்டு கும்கி யானைகள் திரும்பக் கொண்டு செல்லப்பட்டு விட்டன.
தொடரும் உயிர்பலி
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தோட்டக் காவலுக்கு இருந்த அய்யாவு என்ற விவசாயியை யானை அடித்து கொன்றது.
மேலும் அங்கு ஆட்டுக் கிடை அமைத்து அவருடன் படுத்திருந்த மேலச்சிந்தலைச்சேரியைச் சேர்ந்த கெப்புசாமி என்ற விவசாயியை யானை கொல்வதற்காக விரட்டியதில் கால் முறிந்த நிலையில் உயிர் தப்பினார்.
விவசாயிகள் போராட்டம்
மனிதர்களை மட்டுமல்ல அங்கு கிடையில் இருந்த 2 ஆடுகளையும் கொடூரமாக மிதித்துக் கொன்றது. விடிந்த பிறகு அப்பகுதிக்குச் சென்ற விவசாயிகள் பார்த்தபோது அய்யாவு இறந்து கிடந்ததையும், மற்றும் கெப்புசாமி கால் முறிந்த நிலையில் அடிபட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்த அய்யாவுவின் உடலை வைத்துக் கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். வழக்கம்போல் அவர்களது போராட்டத்தை முறியடித்த போலீசார் சடலத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
விவசாயிகள் கொதிப்பு
வன விலங்குகளுக்கு ஏதாவது பிரச்சனையென்றால் மின்னல் வேகத்தில் செயல்படும் வனத்துறை மனித உயிர்களை மட்டும் அலட்சியப்படுத்துவதேன். யானையிடம் இருந்து காப்பாற்ற சொன்னால் மாலை 6 யில் இருந்து காலை 6 மணி வரை காட்டுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். அப்படியென்றால் இரவு நேரங்களில் எப்படி தண்ணீர் பாய்ச்சுவது, விலங்குகளிடம் இருந்தும், திருடர்களிடம் இருந்து விளை பொருட்களை எப்படிக் காப்பது? இதற்கு அரசு உத்திரவாதம் அளிக்குமா?
தொட்டுப்பார்
எத்தனை கும்கி யானைகள் வந்தாலும் மக்கள் யானையை நெருங்கக் கூட முடியாது என்பதுதான் உண்மை. கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டதும் மக்னா யானை பயந்து கொண்டு சென்று விட்டது என்பது வனத்துறையின் விளக்கம். ஆனால் மக்னா யானையிடம் இருந்து 2 கும்கி யானைகள் தப்பி விட்டன என்பது தான் இப்பகுதி மக்களின் கருத்து . மேலும் அதுதான் உண்மை என்றே சொல்லத் தோன்றுகிறது. இனிமேலும் கும்கி யானைகளை வைத்து சர்க்கஸ் காட்டுவதை விட்டுவிட்டு மக்னாவை உயிருடன் படிக்கவோ அல்லது சுட்டு பிடிக்கவோ ஏதாவது உருப்படியான நடவடிக்கை விரைவில் எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வனத்துறையினர் தேடலாமே
துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் அல்லது ராணுவத்தினர் காட்டுக்குள் நுழைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை கொண்டுவந்து தாழ்வாக பறக்கவிட்டும் யானையை தேடிப் பார்க்கலாம். காட்டு விலங்குகளிடம் காட்டும் மனிதநேயத்தை வனத்துறையினர் கொஞ்சம் மனிதர்களிடமும் காட்டினால் பிரச்சனைக்கு விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்.
யானை அகழிகள்
இது எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் கூட மலை அடிவாரப் பகுதிகள் முழுவதும் ஆழமாகத் தோண்டி அகழிகள் அமைக்கலாம் அதனைத் தாண்டி யானை ஊருக்குள் வர முடியாது. கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏவாக இருந்த போது இப்பகுதியில் அகழிகள் அமைக்கப்பட்டதாக கணக்கு உள்ளது. ஆனால் அகழிகளைத் தான் காணவில்லை. இதிலேயும் அரசியல் புகுந்து விளையாடி இருக்கிறது. இனியேனும் மாவட்ட நிர்வாகம் துணிந்து நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்குமா? அல்லது மீண்டும் ஒரு கும்கி சர்க்கஸ் நடக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்தி படங்கள் உதவி: கே. ராதாகிருஷ்ணன், தேனி