அடுத்த பகீரை கிளப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
டிடிவி தினகரன், சசிகலா மீது திண்டுக்கல் சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேனி: ஜெயலலிதா மரணத்துக்கு இவர்தான் காரணம் என்று திரும்பவும் சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
அடிக்கடி எதையாவது தெரியாமல் பேசி சர்ச்சையில் மாட்டி கொள்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால் சில விஷயங்களை இவர் தெரிந்தே பேசுவது மேலும் சர்ச்சையுடன் கலந்த பகீரையும் கிளப்பிவிட்டு செல்கிறது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால்தான் அது சம்பந்தமாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் ஜெயலலிதா மரணத்திற்கு இவர்கள்தான் காரணம் என தடாலடியாக சொல்லி இருக்கிறார் அமைச்சர்.
அமைச்சர்கள் பங்கேற்பு
ஆண்டிபட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உறவினர்தான் தினகரன்
அப்போது திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது சொன்னதாவது: "ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த சசிகலாவின் உறவினர்தான் தினகரன். அவரால்தான் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்டது.
கொள்ளை அடித்தார்
அதனால்தான் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை ரொம்பவும் மோசமாகி விட்டது. நல்ல மருத்துவம் பார்த்திருந்தால் என்ன? ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி தினகரன் கொள்ளை அடித்தார். சசிகலா கொள்ளை அடித்ததால் அந்த மன வேதனையிலேயே ஜெயலலிதா இறந்தார்.
ஏன் அண்ணே??
அதிமுகவில் இருப்பவர்களை ஸ்டாலின் இழுக்கப்பார்க்கிறாராம். அது முடியாது. ஸ்டாலினை முதல்வராக ஆக்குவேன் என்கிறார் வைகோ. நான் அவரிடம் பேசும் போது, ஏன் அண்ணே... டெப்பாசிட் வாங்கும் கட்சியோடு சேர மாட்டீங்களா? என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்" என்றார்.
மீண்டும் குற்றச்சாட்டு
ஏற்கனவே இதே குற்றச்சாட்டை அமைச்சர் மேடைகளில் சொல்லியிருப்பினும், ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை சூடு பிடித்து வரும் வேளையில் இந்த குற்றச்சாட்டு அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.