ஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு!
துணை முதல்வரை செல்லூர் ராஜு புகழ்ந்து பேசி உள்ளார்
தேனி: துணை முதல்வர் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததாலோ என்னவோ, அவர் தொகுதிக்குள்ளேயே நுழைந்து.. அவர் பெயருக்கே விளக்கம் தந்துவிட்டு வந்துள்ளார் நம் செல்லூர் ராஜூ!
தேனியில் கூட்டுறவு துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், எம்பி ரவீந்திரநாத்குமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
செல்லூர் ராஜு பேச வந்தபோது, கூட்டத்தில் யாரும் உற்சாகத்துடன் இல்லை போலும். அதனால் செல்லூர் ராஜுவே கலகலவென பேச்சை தொடங்கி கூட்டத்தை நிமிர்ந்து உட்கார வைத்தார்.
"ஏன் இப்படி எல்லோரும் சைலண்ட்டா இருக்கீங்க?. தேனி வந்தா சுறு சுறுப்பா இருப்பீங்கன்னு பார்த்தா, இப்படி இருக்கீங்களே? முதல்ல கை தட்டுங்க.. கை தட்டினா ஹார்ட்டுக்கு நல்லது.. ரத்த ஓட்டம் இருக்கும். வாட்ஸ் ஆப், யூ டியூப் எல்லாம் நீங்க பார்க்கிறது இல்லையா? நல்லா கையை தட்டுங்க" என்றதும்தான் சிரிப்பலை எழ ஆரம்பித்தது.
தொடர்ந்து பேசி கொண்டே வந்த அமைச்சர், "ஓ என்றால் ஒற்றுமை, பி என்றால் பாசம், எஸ் என்றால் சேவை" துணை முதல்வரின் பெயருக்கு விளக்கம் அளித்தார். அப்போது, ஓபிஎஸ் மகனான எம்பி ரவீந்திரநாத் குமார் அமைச்சரின் பேச்சினை முழுவதுமாக ரசித்தபடியே கேட்டு கொண்டிருந்தார்.
கூட்டம் முழுக்க அண்ணண், அண்ணன் என்று ஓபிஎஸ் புகழ்தான்.. அப்பப்போ அவரை பற்றி கவிதைகளையும் பேசும்போது அள்ளி தெளித்தார் அமைச்சர்.. "வாங்கிய கடனை நீங்க கட்டி விடுவீர்கள். ஏன்னா, பார்க்கத்தான் கரடுமுரடாக இருப்பீங்க.. பாசத்துல உங்களை அடிச்சிக்க முடியாது" என்று மக்களுக்கும் ஒரு ஜில் வைத்துவிட்டு போனார்!