58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு
தேனி: ஆண்டிப்பட்டி அருகே உள்ள 58-ம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டதற்கு எலிகளும், காட்டுப்பன்றிகளுமே காரணம் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வைகை அணையில் இருந்து கடந்த 5-ம் தேதி 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கால்வாய் கரை உடைந்து விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே 58-ம் கால்வாயை ஆய்வு செய்த அமைச்சர் உதயகுமார், கரையில் ஏற்பட்ட உடைப்புக்கு காரணம் கண்டுபிடித்துள்ளார்.
கரை உடைப்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.புதூர் பகுதியில் அமைந்திருக்கிறது 58-ம் கால்வாய். இந்த கால்வாய்க்கு கடந்த 5-ம் தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் கால்வாய் கரையில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் அருகாமையில் இருந்த விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
பன்றியே காரணம்
58-ம் கால்வாயில் கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எலிகளும், காட்டுப்பன்றிகளும் கரையை துளையிட்டதால் தான் உடைப்பு ஏற்பட்டதாகவும், சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சீரமைப்பு
மேலும், 58-ம் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், கரை உடைப்பு சரி செய்த பின்னர் மீண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
அமைச்சர் உறுதி
அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை முற்றுகையிட்ட விவசாயிகளும், பெண்களும் உரிய இழப்பீடு கோரினர். மேலும், டி.புதூர் பகுதிக்கு போதிய பேருந்துவசதி இல்லை எனவும் முறையிட்டனர். அதனைக் கேட்ட அமைச்சர் உதயகுமார், தேனி மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக பேசுவதாக உறுதியளித்தார்.