கரெக்டா ராத்திரி 12 மணிக்கு "அது" அரங்கேறுது.. டென்ஷனில் சில்வார்பட்டி
வாகனங்களுக்கு தீ வைக்கும் மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேனி: யார் என்னன்னே தெரியலையாம்.. தேனி பக்கத்துல திடீர் திடீர்னு பைக், ஆட்டோவுக்கு ராத்திரி நேரங்களில் தீ வைச்சி விட்டுடறாங்களாம்!
கொஞ்ச நாளாகவே தேனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த சம்பவம் நடந்து வருகிறது. பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டியை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் போன வாரம் தன் வீட்டு முன்பு ஆட்டோவை இரவில் நிறுத்திவிட்டு தூங்க போய்விட்டார்.
நடுராத்திரி சத்தம் கேட்கவும் வெளியே ஓடிவந்து பார்த்தார். அப்போது, அங்கே நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ நெருப்பு பத்தி தகதகன்னு எரிஞ்சிட்டு இருப்பதை பார்த்து அலறினார். அந்த ஆட்டோ மீது பெட்ரோலை ஊற்றி விட்டு கொளுத்தி இருக்கிறார்கள்.
யார் செய்கிறார்கள்?
இதனால் இது சம்பந்தமாக காளீஸ்வரன் போலீசில் புகார் அளித்தார். காளீஸ்வரன் மட்டுமில்லை... தினமும் அந்த பகுதியில் யார் வீட்டிலாவது ஒரு பைக், அல்லது வண்டி ஏதாவது ஒன்று பற்றி எரிகிறது. எல்லாமே ராத்திரி நேரத்தில்தான் நடக்கிறது. இதை யார் செய்கிறார்கள் என்று இதுவரை தெரியவே இல்லை. போலீசாரும் இது சம்பந்தமாக நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.
சைக்கோ மனிதனா?
வெறும் வாகனங்களையே குறி வைத்து எரிக்கப்படுகிறது. எல்லா வண்டிகள் மீதும் பெட்ரோல்தான் ஊற்றி எரிக்கப்படுகிறது. இந்த வேலையை செய்வது யாராவது சைக்கோவாக இருக்குமா என்றும் போலீசார் சந்தேகப்படுகிறார்கள். சில நேரங்களில் வண்டிகளில் இருந்து உதிரி பாகங்களும் அபேஸ் ஆகிறது. இதனால் தேனி பகுதி மக்கள் பயப்படுகிறார்கள். தினமும் ராத்திரி நேரங்களில் பயந்து பயந்து சாகிறோம் என்கிறார்கள்.
ரோந்து போலீஸ்
"வண்டியை எரிச்சா பரவாயில்லை.. நாங்க வீட்டு முன்னாடியே படுத்து தூங்கறோம்.. நாளைக்கு எங்களுக்கு ஏதாவது ஆனா என்ன செய்றது? ரோந்து பணியில போலீஸ் இறங்கிதான் இதை கண்டுபிடிக்கணும்" என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
ராத்திரி 12-2 மணி வரை
இதுவரைக்கும் 5 பைக் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. இது நடப்பது சரியாக ராத்திரி 12 மணியிலிருந்து 2 மணி வரைக்குள். கரெக்டா இந்த நேரத்தில்தான் யாரோ ஒருவர் வீட்டில் வண்டி எரிகிறது. ஆனால் அது யார் வீடு என்று தீப்பற்றி எரியும் வரை தெரியாது. எனவே இப்படி கொளுத்துவது சைக்கோ மனிதனா? அல்லது ஏதேனும் கும்பலா என்று தெரியவில்லை.