மகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்
Recommended Video
தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்து மகனை கல்லூரியில் சேர்த்ததாக உதித் சூர்யா தந்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறையில் மருத்துவராக உள்ளார்.
இவரது மகன் உதித் சூர்யா. இவர் கடந்த 2019-2020 ஆகிய கல்வியாண்டுக்கான மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாரின் பேரில் க. விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.ஆனால் அதற்குள் உதித் சூர்யா குடும்பத்தோடு தலைமறைவானார்.
சாதாரண விஷயம் அல்ல
இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எளிதாக விட்டுவிடக்கூடாது என்பதால் தனிப்படை அமைத்து போலீசார் உதித் சூர்யாவை தேடிவந்தனர்.
2 மாதம் படித்துள்ளார்
மேலும் ஒருவர் தேர்வு எழுதாமல் எம்பிபிஸ் சேருவது எப்படி சாத்தியம் என்ற கோணத்திலும் அதற்கு உதவியர்கள் யார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஏனெனில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கலந்தாய்வில் சீட் பெற்று இருந்தாலும் படிக்க வரும் போது அவரது புகைப்படத்துக்கும் உதித் சூர்யாவின் அடையாள சான்றிதழ்களில் உள்ள புகைப்படத்துக்கும் நிச்சயம் வித்தியாசம் தெரிந்திருக்கும்.இப்படி சூழலில் அந்த மாணவர் தேனி கல்லூரியில் சேர்ந்து 2 மாதங்கள் படித்துள்ளார். எனவே இது எப்படி சாத்தியம் என்று தேனி மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
முன்ஜாமீன் தள்ளுபடி
இதற்கிடையே உதித் சூர்யாவை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தநிலையில் வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. அதேநேரம் உதித் சூர்யா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியும் செய்யப்பட்டது.
சிபிசிஐடிஅதிகாரிகள் விசாரணை
பின்னர் வேன் மூலம் தேனிக்கு அழைத்து வந்தனர். தேனியில் சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் ஆகியோரிடமும் சிபிசிஐடி அலுவலத்தில் விசாரணை நடத்தப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் சிபிசிஐடி டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மகனை மருத்துவராக்க ஆசை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்து மகனை கல்லூரியில் சேர்த்ததாக உதித் சூர்யா தந்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்
விசாரணைக்கு பின்னர், உதித் சூர்யாவின் மீது ஆள் மாறாட்டம், கூட்டுச் சதி, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகியோர் மீதும் இதே பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது. விசாரணை முடிந்த நிலையில் அவர்களை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அதாவது அக்.10 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.