மாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு
Recommended Video
தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவின் வாக்கு மூலத்தில் இருந்து தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் சிபிசிஐடி போலீசாரிடம் அளித்த விளக்கம் மாறுப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரது மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து நடந்த விசாரணையில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் உதித்தின் தந்தை வெங்கடேசன் ரூ.20லட்சம் பணம் கொடுத்து வேறு ஒரு மாணவரை வைத்து தேர்வு எழுதி மோசடி செய்து மருத்துவக்கல்லூரியில் மகனை சேர்த்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
லட்சக்கணக்கில் முறைகேடு.. 3 மாணவர்கள் சிக்கிய விவகாரத்தில் வெளிவரும் பரபர தகவல்கள்
விசாரணையில் திருப்பம்
இந்நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் சிபிசிஐடி போலீசார் முன்னதாக (உதித் சூர்யாவை விசாரிக்கும் முன்பு) விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த விளக்கத்துக்கும் சிபிசிஐடி போலீசாரிடம் உதித் சூர்யா அளித்த வாக்குமூலத்திற்கும் வேறுபாடு உள்ளது தெரியவந்துள்ளது.
ஹால்டிக்கெட்டில் உள்ள நபர்
தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அளித்த விளக்கத்தில், மாணவர் சேர்க்கையின் போது ஹால்டிக்கெட்டில் உள்ள நபர் தான் பங்கேற்றார். அதன் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்வு எழுதிய மாணவர்
இதனால் நீட் தேர்வு எழுதிய நபரே, கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையில் பங்கேற்றதாகவும்,கல்லூரி வகுப்பில் சேர்ந்ததில் மட்டும் உதித் சூர்யா பங்கேற்றதாகவும் கல்லூரி முதல்வர் தரப்பில் கூறப்பட்டது.
சேர்க்கையில் பங்கேற்றேன்
ஆனால் உதித் சூர்யா அளித்த வாக்கு மூலத்தில் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையில் தானே நேரடியாக பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். ஆள்மாறாட்டம் செய்த நபரின் புகைப்படம் இடம் பெற்றுள்ள ஹால்டிக்கெட்டை வைத்து உதித் சூர்யா கல்லூரியில் சேர்ந்தது எப்படி? கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையின் போது கவனிக்கத் தவறியது ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
சுயவிவர பட்டியல்
மாணவர் உதித் சூர்யா மாணவர் சேர்க்கையின் போது தனது புகைப்படத்துடன் கூடிய சுயவிவர பட்டியலை மருத்துவக்கல்லூரியில் வழங்கி இருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் உள்ள புகைப்படமும் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படமும் வேறுவேறாக உள்ளது.
வாக்குமூலம் வேறுபாடு
அத்துடன் மாணவர் உதித் சூர்யா அளித்துள்ள வாக்குமூலத்திற்கும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் சிபிசிஐடி அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலமும் வேறுவேறாக உள்ளது. எனவே சிபிசிஐடி போலீசார் உயர் அதிகாரிகளிடமும் விசாரணையை துவக்கி உள்ளனர். இதன் முடிவுகள் வெளிவந்தால் தான் இதில் உள்ள மர்மங்கள்விலகும். யார் யாருக்கு என்ன தொடர்பு என்பது தெரியவரும்.