நீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார்
தேனி: நீட் நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் அரசு பள்ளிகளில் தமிழக மாணவர் ஜீவித்குமார் முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் ஜீவித்குமார் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக பெண்கள் விடுதலை கட்சியின் நிறுவனரான ஆசிரியர் சபரிமாலா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
நீட்: இந்திய அரசு பள்ளிகளில் தமிழகத்தின் ஜீவித்குமார் முதலிடம்! தனியார் பள்ளியின் ஶ்ரீஜன் 8வது இடம்
3 ஆண்டுகால அவலம்
இப்போது நம்முடன் இருக்கும் சாதனையாளர் மாணவர் ஜீவித்குமார். நீட் அப்படின்னா அரசு பள்ளி மாணவர்களால் சாதிக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் 3 ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிக்குப் போகவில்லை என்கிற நிலை இருந்தது.
அன்பு மகள் அனிதாவுக்கு சத்தியம்
இந்த நிலையில் அன்புமகள் (அரியலூர்) அனிதாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்தேன். கட்டாயம் இந்த இடத்தில் ஒரு அரசுப் பள்ளி பிள்ளையை, கிராமத்து பிள்ளையை நான் படிக்க வைப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டுதான் அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தேன்.
ஜீவித்குமார் தேர்வு
கடந்த 3 ஆண்டுகளாக களத்தில் நிற்கிற சமூக ஆசிரியராக கடந்த ஆண்டு இதே பள்ளியில், இதே நுழைவாயிலில் இதே இடத்தில் மாணவர் ஜீவித்குமாரிடம் கேட்டேன். ஓராண்டு உன்னை படிக்க வைக்க நான் தயார்... நீ என்ன வாக்குறுதி கொடுப்பாய்? என கேட்டேன். 650 மதிப்பெண்களுக்கு மேல் வாங்குவேன் என்று வாக்குறுதியை இந்த இடத்தில்தான் கொடுத்தார்.
சாதித்து காட்டிய ஜீவித்குமார்
ஓராண்டு கோச்சிங் சென்டரில் சேர்த்து படிக்க வைத்தோம். நாமக்கல்லில் தனியார் பயிற்சி மையத்தில் படிக்க வைத்தோம். அவர்கள் சலுகைகள் கொடுத்தார்கள். அமெரிக்காவில் இருந்து ஒரு தோழர் நிதி உதவி செய்தார்கள். ஆசிரியர் அருள்முருகனால் ஜீவித்குமார் அடையாளம்காணப்பட்டார். சிலபஸ் கொடுத்தால் ஜெயித்து காட்டுவேன் என்று சொன்னார் ஜீவித்குமார். இன்று சாதித்து காட்டியிருக்கிறார். இவ்வாறு ஆசிரியர் சபரிமாலா கூறியுள்ளார்.