நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது
Recommended Video
தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை தனியார் மருத்துவ கல்லூரி மாணவியான பிரியங்காவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.
நீட்' தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், மாணவர் பிரவீன், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததை தொடர்ந்து அவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவி பிரியங்காவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேனிக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். இன்று விசாரணை நடந்த பின்னர் மாணவி பிரியங்காவை போலீசார் கைது செய்தனர்.