பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி?
தேனி: துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.
ஆனால் அதனை ஓ.பி.எஸ். விரும்பவில்லை என்றும், கட்சியில் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தி விடும் என்பதும் அவரது எண்ணமாம்.
ஏற்கனவே மதுரை ஆவின் சேர்மன் பதவியை கைப்பற்றும் விவகாரத்தில் ஓ.ராஜாவால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேவையற்ற தர்மசங்கடம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்?
முன்னாள் தலைவர்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தில் தம்பி தான் ஓ.ராஜா. இவர் கடந்த 2011-2016 காலகட்டத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சித் தலைவராக பதவி வகித்தார். பதவிக்காலம் முடிவடைய சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவித்தார்.
தன்னிச்சை முடிவு
மதுரை ஆவின் சேர்மன் பதவிக்கு ஓ.ராஜாவை போட்டியிட வேண்டாம் என அவரது அண்ணன் ஓ.பி.எஸ்.கூறியும் அதை கேட்காமல் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அப்செட் ஆகி இது தொடர்பான தங்கள் வருத்தத்தை கட்சித் தலைமைக்கு பதிவு செய்தனர்.
கட்சியில் இணைப்பு
ஓ.ராஜா மதுரை ஆவின் சேர்மன் ஆனது கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தி விடும் என அஞ்சிய இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும், ஓ.ராஜா ஆவின் சேர்மன் ஆன 5 மணி நேரத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்கினர். சொந்தத் தம்பியையே கட்சியிலிருந்து ஓ.பி.எஸ். நீக்கியது அவருக்கு இமேஜை உயர்த்தியது. ஆனால் ஒரு வாரத்தில் ஓ.ராஜா வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததால் அவரை மீண்டும் இணைத்துக்கொள்வதாக அதிமுக தலைமை அறிவித்தது.
மீண்டும் போட்டி?
இந்நிலையில் இப்போது உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால் மீண்டும் பெரியகுளம் நகரசபை தலைவர் பதவிக்கு போட்டியிட ஓ.ராஜா விரும்புகிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஓ.பி.எஸ். தரப்பில் வேண்டாம் எனக் கூறப்படுகிறதாம். ஏற்கனவே ஓ.பி. ரவீந்தரநாத் எம்.பி. ஆனதே கட்சியில் பலரது கண்களை உருத்துவதாகவும், இந்த சூழலில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஓ.ராஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.