3வதும் பொண்ணா போச்சு.. எருக்கம் பால் ஊத்திட்டோம்... அதிர வைத்த ஆண்டிப்பட்டி..சிசு கொலை!
பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொன்றுள்ளார் தாய்
தேனி: "3வதும் பொண்ணா பொறந்துடுச்சு.. அதான் எருக்கம்பால் ஊத்திட்டோம்.. செத்துடுச்சு.. என்று பிறந்து ஒரு மாதம்கூட ஆகாத பெண் சிசுவை கொன்ற தாய் வாக்குமூலம் தந்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து அருகே உள்ளது ராமநாதபுரம் கிராமம்.. இங்கு வசித்து வருபவர்கள் சுரேஷ் - கவிதா தம்பதி. சுரேஷ் கட்டிட வேலை செய்கிறார்.. கல்யாணம் ஆகி 11 வருடங்கள் ஆகின்றன.. இவர்களுக்கு 10 வயது மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி கவிதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.. ஆனால் சில நாட்களாக அந்த குழந்தையை காணோம்.. வீட்டில் இருந்து குழந்தையின் சத்தமும் வரவில்லை.. அதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்து அதை பற்றி கேட்டனர்.
கிராம மக்கள்
உடம்பு சரியில்லாமல் குழந்தை இறந்துவிட்டதாக காரணம் சொல்லி உள்ளனர் கவிதா தம்பதியினர்.. இது சம்பந்தமாக யாருக்குமே சொல்லாமல் குழந்தையை வீட்டு பக்கத்திலேயே அடக்கமும் செய்துள்ளனர்... இதனால் கிராம மக்கள் மாவட்ட குழந்தை நல அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து... இதைபற்றி ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகரிடம் புகார் தந்தனர்.
செல்லம்மாள்
இந்த புகாரின்பேரில் ஆண்டிப்பட்டி தாசில்தார் கவிதா தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.. இதில் கவிதாவும் அவரது மாமியார் செல்லம்மாவும் முன்னுக்கு பின் முரணாக உளறி கொட்டினர். இதனால் சந்தேகம் அதிகமானதையடுத்து.. குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்ய உத்தரவிட்டனர்.. மேலும் ராஜதானி போலீஸாருக்கும் கவிதா தம்பதி குறித்து புகார் தந்தனர்.
மாமியார் - மருமகள்
அவர்கள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில்தான் மொத்த விஷயத்தையும் கவிதா வாக்குமூலமாக தெரிவித்தார். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால், 3வதும் பெண்ணா என்று மாமியார் வாய்க்கு வந்தபடி பேசி வந்துள்ளார்.. மாமியாரின் தூண்டுதலின் பேரிலேயே எருக்கம்பாலை குழந்தைக்கு ஊற்றி கொன்றதாக கவிதா போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாமியார் - மருமகள் 2 பேரும் கைதாகி உள்ளனர்.
நடவடிக்கை
கொஞ்ச காலமாக இல்லாமல் இருந்த பெண்சிசு திரும்பவும் மதுரை, தேனி மாவட்டங்களில் தலை தூக்க தொடங்கி உள்ளது அதிர்ச்சியாக உள்ளது.... ஈவிரக்கமில்லாமல் பச்சிளம் சிசுக்களை கொல்லும் இத்தகைய பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் வேறு யாரும் இப்படி செய்ய துணிய மாட்டார்கள் என்று கொதித்து போய் சொல்கிறார்கள் பொதுமக்கள்!
கள்ளிப்பால், எருக்கம்பால்
கடந்த மார்ச் 5ம் தேதிதான் உசிலம்பட்டி பக்கத்திலும் இதுபோல 30 நாட்களே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோர் கொலை செய்து தற்போது ஜெயிலில் உள்ளனர்.. அதற்குள் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.. ஆண் பிள்ளை தான் வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களை தூக்கி உள்ளே வைத்தால்தான் இந்த கள்ளிப்பாலுக்கும், எருக்கம்பாலுக்கும் ஒரு முடிவு கிடைக்கும்!