உதயநிதிக்கு அன்பகம் மாதிரி தம்பிக்கு கட்சி ஆபீஸை கொடுத்துடலாம்னே... ஓபிஎஸ்-க்கு தூபம்!
தேனி: அதிமுக லோக்சபா எம்.பி. ரவீந்திரநாத்துக்கு தேனியில் தனி அலுவலகம் அமைத்து தருவதில் துணை முதல்வர் ஓபிஎஸ் தீவிரமாக இருக்கிறாராம். அதேநேரத்தில் கேட்பாரற்று கிடக்கும் தேனி அதிமுக தலைமை அலுவலகத்தை ரவீந்திரநாத்துக்கு கொடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும் தூபம் போடப்படுகிறதாம்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது தேனி மாவட்ட அதிமுக அலுவலகம் எம்ஜிஆர் சிலையுடன் அமைக்கப்பட்டது. எப்போதும் திருவிழா கோலம் போல தொண்டர்கள் கூட்டம் அலைமோதும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த அலுவலகத்தை தினகரன் ஆதரவாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கைப்பற்றினார். இது தொடர்பாக துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்புக்கும் தங்கம் தரப்புக்கும் மோதல் வெடித்திருக்கிறது.
ஆனால் தேனி மாவட்ட அதிமுக அலுவலகம் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இதனால் ஓபிஎஸ் தரப்பு அமைதி காத்தது.
தற்போது தங்கம், திமுகவுக்கு தாவி விட்டார். இதனால் தேனி அதிமுக அலுவலகம் வெறிச்சோடி கேட்பாரற்று கிடக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒரே எம்.பி.யாக மகன் ரவீந்திரநாத் குமாருக்கு பிரமாண்ட அலுவலகம் ஒன்றை அமைத்து தரும் முயற்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் இறங்கியுள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட அதிமுக தொண்டர்கள், அம்மாவால் திறந்து வைக்கப்பட்ட அலுவலகம் வெறிச்சோடி கிடக்குது.. நீங்க நினைத்தால் அதை கட்சிக்கே கொண்டு வந்துவிட முடியும்...அவங்க எல்லாம் உதயநிதிக்கு தனி அலுவலகமாக கட்சி ஆபீசான அன்பகத்தைதானே கொடுத்திருக்காங்க.. அதேபோல ஒரே எம்பி.. தம்பி... தேனி தொகுதி அலுவலகத்தையே தம்பிக்கே கொடுத்திடலாம்ணே... என தூபம் போடுகின்றனராம் அவரது ஆதரவாளர்கள்.