முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்த ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்.. கூடவே எழுதிய கடிதம்
தேனி: தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கொரோனா வைரஸ் தடுப்புக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகும். பெரியகுளத்தில் வசித்து வரும் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1கோடி அளித்ததுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, " இந்திய நாட்டின் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக மனித இனத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.இந்த கடினமான சூழ்நிலைகளில் தமிழக மக்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் தங்கள் மற்றும் துணை முதல்வர் அவர்களின் தலைமையில் செயல்படும் தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும், அரசு பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பொது சேவை நிறுவனங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா நோயிலிருந்து நமது மக்களை பாதுகாக்க முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலக கிளை , கணக்கு எண் 117201000000010-க்கு வி.ப.ஜெயபிரதீப் வங்கி கணக்கான சிட்டி யூனியன் வங்கி , மந்தை வெளி கணக்கு எண் 510909010008692 லிருந்து எனது சார்பாக 1 கோடி அளிப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இந்த நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கிய தங்களுக்கு எனது நன்றியினை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
"இதுவும் கடந்து போகும்" என்ற உலக நீதியின் படி எல்லா சோதனைகளும் சிறிது காலமே என்ற நடைமுறைக்கு ஏற்பட , எல்லா வல்ல இறைவனின் அருளால் இந்த கொரோனா நோயிலிருந்து உலக மக்கள் அனைவரும் குணமடைந்து தமிழகம், இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தும் நல்ல நிலைக்கு வருவதற்கு நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். இதன் மூலம் கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசியல்வாதிகளிலேயே ஓ பன்னீர்செல்வம் மகன் தான் மிக அதிகமாக தனது சொந்த பணமான ஒரு கோடி ரூபாயை நிதியுதவியாக தந்துள்ளார்.