நாம் அனைவரும் முதலில் இந்து... பேசியது யார் தெரியுமா...!
தேனி: ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி. ''நாம் அனைவரும் முதலில் இந்து.. அப்புறம் தான் மற்றதெல்லாம்..'' எனப் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் குமார், இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும், நாம் அனைவரும் முதலில் இந்து..பிறகு தான் மற்றது எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டும் தாம் தான் சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைத்ததாகவும், இந்த ஆண்டும் எம்.பி.யாகிய நிலையிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாகவும் சுயபுராணம் பாடினார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த இந்து முன்னணி அமைப்பினருக்கு ரவீந்தரநாத்தின் பேச்சு மகிழ்ச்சியை அளித்தது. அதேநேரம் அங்கிருந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாழ்க்கையில் இருக்கும் ஒருவர், அதுவும் துணை முதலமைச்சர் மகன், தேனி தொகுதியின் மக்கள் பிரதிநிதி என பொறுப்பான பதவியில் இருக்கும் ஓ.பி.ரவீந்தரநாத் இப்படி பேசியது அதிமுகவில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பது சையது கான் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் மத்திய அரசு.. கே.எஸ்.அழகிரி கண்டனம்
எம்.பி.என்ற முறையில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டதால் கூட்டத்தில் கலந்துகொண்டதெல்லாம் சரி, ஆனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பேசியிருக்க வேண்டும் என்கிறார் அதிமுக சீனியர் நிர்வாகி ஒருவர்.