வராஹா நதிக்கரையோரம்... இளைஞர்களை ஈர்க்க ஓ.பி.எஸ். மகன் முன்னெடுக்கும் மெகா பிளான்..!
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வராஹா நதியை தூய்மைப்படுத்தும் முயற்சியாக ''வராஹா நதியை பாதுகாப்போம்'' என்ற பெயரில் இயக்கம் தொடங்கியிருக்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத்.
முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வராஹா நதி பாதுகாப்பு இயக்கம் மூலம் தனக்கான பிராண்டிங் பணிகளையும் கணக்கச்சிதமாக செய்து வருகிறார் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி.
இதனிடையே கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வராஹா நதி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் அது முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவமனை... மின்தடையால்... 3வது நபர் இறந்ததாக கலெக்டரிம் புகார் மனு!!
பெரியகுளம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தின் அடையாளங்களில் ஒன்று வராஹா நதி. இந்த நதியை பொறுத்தவரை புனித நதியாக கருதி அதில் இருந்து தீர்த்தங்கள் எடுத்துச்செல்லப்பட்ட காலம் மறைந்து இப்போது ஓடையை போல் அது காட்சியளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீர் தலச்சி ஆறு, பேரிஜம் ஆறு ஆகியவைகள் மூலம் ஒருங்கிணைந்து வராஹா நதியாக ஓடிக்கொண்டிருந்தது.
ஆறு கண்காணிப்பாளர்
வராஹா நதிக்கரையை கண்காணிக்க 'ரிவர் வாட்சர்' என்ற ஆறு கண்காணிப்பாளர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்துள்ளன. அவர்கள் வராஹா நதிக்கரையில் இரு புறமும் தினமும் ஆய்வு நடத்தி குப்பைகளை கொட்டுபவர்களுக்கும், அசுத்தம் செய்பவர்களுக்கும் அபராதங்கள் விதித்து வந்துள்ளனர். ஆனால் நாளடைவில் அந்தப் பணியிடங்கள் அகற்றப்பட்டதால் வராஹா நதி கூவம் நதியை போல் மாறத்தொடங்கியது.
சேவ் வராஹா
இந்நிலையில் தேனி மக்களவை தொகுதி உறுப்பினரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்தரநாத் வராஹா நதி பாதுகாப்பு இயக்கம் (சேவ் வராஹா) தொடங்கி தன்னை ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக காட்டியிருக்கிறார். இதன் மூலம் கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் தன் பக்கம் இழுப்பதற்கான மெகா பிளானோடு இந்த இயக்கத்தை அவர் முன்னெடுத்து வருகிறார்.
80 % நிறைவு
தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்தரநாத் முயற்சியில் வராஹா நதி புதுப்பொலிவு பெற்று வருவதை யாரும் மறுக்க முடியாது. கூவம் போல் காட்சியளித்த வராஹா நதி இப்போது தெளிந்த நீரோடையாக மாறி வருகிறது. கடந்த 9-ம் தேதி வராஹா நதி தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போதைய நிலவரப்படி 80% பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் எஞ்சிய பணிகளும் நிறைவடைந்தால் பழைய வராஹா நதியாக பெரியகுளம் வாசிகள் அதனைக் காணலாம்.
இயற்கை எழில்
பொதுவாகவே தேனி மாவட்டத்தை பொறுத்தவரை இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான இடங்கள் பல உள்ளன. வராஹா நதியை போல் இன்னும் ஒரு சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை முன்னெடுக்க உள்ள ரவீந்தரநாத் எம்.பி., அந்தப் பணிகளில் கட்சிக்கு அப்பாற்பட்ட தன்னார்வலர்களை தன்னுடன் இணைத்து செயல்படும் திட்டத்தில் இருக்கிறார்.