ரஜினி பக்கம் போகிறாரா ஓபிஎஸ்.. என்னாது.. சான்ஸே இல்லை.. மறுக்கும் ஆதரவாளர்கள்!
தேனி: துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ரஜினியுடன் இணைப்போவதாகவும், சசிகலாவுக்கு ஆதரவளிக்க போவதாகவும் பரவிய தகவலில் உண்மை இல்லை என ஒபிஎஸ் தரப்பு மறுத்துள்ளது. அத்துடன் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தது குற்றமா அதை ஊதி பெரிதாக்கிவிட்டார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.
தமிழக அரசியல் அதிகம் பேசப்படும் நபர் என்றால் அது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தான். இவரை பற்றித்தான் அண்மைக் கால ஊடக செய்திகள் இருக்கின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல், ரஜினியுடன் இணைப்போகிறார், சசிகலா வெளியே வந்தால் ஆதரவு அளிப்பார் என பலவாறு ஊடகங்களில் ஓபிஎஸ் பற்றிய ஊகச்செய்திகள் காட்டுத்தீ போல் பரவின.
மோதல் இல்லை
இதுபற்றி துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் விசாரித்த போது, ரஜினியுடன் இணைப்போவதாக பரவிய தகவல், சசிகலாவுக்கு ஆதரவளிக்க போவதாக பரவியதாக தகவல், முதல்வருடன் மோதல் என பரவிய செய்திகள் எதுவுமே உண்மை இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்கள்.
ரஜினிக்கு வாழ்த்து ஏன்
இதுபற்றி அவர்கள் கூறும் போது, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பொதுவாக அனைத்து கட்சியினருடனும் நல்லுறவைப் பேணுவார். மாற்றுக்கட்சியனராக இருந்தாலும் மதித்து நடக்ககூடியவர். இந்த அடிப்படையில் தான் நடிகர் ரஜினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சாதாரண விஷயத்தை சிலர் ஊதி பெரிதாக்கி விட்டார்கள்.
சசிகலாவுக்கு ஆதரவு
இதேபோல சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் நிகழச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒபிஎஸ், ‘' ஆண்கள் மட்டும்தான் முதல்வராக பதவி வகிக்க வேண்டுமா? இரண்டரை ஆண்டுகள் ஆண்களும், மீதி இரண்டரை ஆண்டுகள் பெண்களும் பதவி வகித்தால் நன்றாக இருக்குமே!'' என்றார். ஆனால் அப்படியே அதை திரித்து, சசிகலாவை மனதில் வைத்துதான் பன்னீர் இப்படி கூறினார் என்று கதை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அத்துடன் முதல்வருக்கு எதிராக உள்ளதாகவும் கதை கட்டிவிட்டார்கள்
சூழ்ச்சியை விரும்பாதவர்
உண்மையில் ஓபிஎஸ்- எப்போதும் வெளிப்படையானவர். அதேநேரம் தனது சுயமரியாதைக்கு பங்கம் வந்தால் அதனை எதிர்க்க எந்த எல்லைக்கும் செல்வார். அவரது வெளிப்படையான நடவடிக்கைகள் அவருக்கு மேலும் மேலும் வெற்றியையே தரும்'' என அவரது ஆதரவாளர்க்ள் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்கள்.