எடப்பாடி தூக்கியெறியப்பட்டு ஓபிஎஸ் முதல்வராவார்.. பாக்க தானே போறீங்க.. தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி
தேனி: மீண்டும் பிரதமராக உள்ள மோடியின் ஆதரவுடன், தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பொறுப்பேற்பார் என தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது, அதிமுகவிற்கு ஒரு இடமே கிடைத்தது, எனினும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வந்துள்ளதும், பேரவை இடைத்தேர்தல்களில் வென்று அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளதும் தமிழகத்தில் இனி எப்படிப்பட்ட அரசியல் மாற்றங்களை நிகழ்த்தப் போகிறது என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் எதிர்பார்ப்புகளுக்கு தீனி போடும் வகையில், அமமுக-வை சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ள கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது என்றார். தேனி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறாத அதிமுக, நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் அமமுக-விற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவிற்கு சின்னமும் ஒரு காரணம். ஏனெனில் வாக்காளர்களில் பலர் எனக்கு வாக்களிப்பதாக நினைத்து தவறுதலாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்துள்ளனர் என்றார். துணை முதல்வரின் மகன் வெற்றி குறித்து கூறிய அவர், தேனி தொகுதியில் விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிகம்.
ஆந்திரா: ஜெகனுக்கு அரியாசனத்தைப் பெற்றுக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்
வெறும் 100 ரூபாய்க்காக பல மணி நேரம் கடுமையாக உழைப்பவர்கள். அவர்களின் குடும்பங்கள் ஒன்றிற்கு சராசரியாக ஐந்தாயிரம் ரூபாய் வரை அதிமுக சார்பாக விநியோகிக்கப்பட்டுள்ளது.இப்படி பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி தான் ஓபிஎஸ் மகன் வென்றுள்ளார் என சாடினார்.
மத்தியில் ஆட்சியை பிடித்துள்ள மோடியின் பார்வை பழனிசாமி மீதிருப்பதை விட பன்னீர்செல்வத்தின் மீது தான் அதிகம் உள்ளது. மோடியின் ஆசியால் விரைவில் எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். இந்த காட்சி தமிழகத்தில் விரைவில் அரங்கேறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என கூறி அதிர வைத்தார்.
அதற்கான காரணத்தையும் முன்வைத்தார் தங்கதமிழ்ச்செல்வன். இனி அதிமுக மோடி சொல்லுக்கு அடங்கி நடக்கவேண்டும். இதற்காக எடப்பாடியை விட ஓபிஎஸ்குதான் அதிக முன்னுரிமை கொடுப்பார் மோடி. எனவே முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி விரைவில் தூக்கியெறியப்பட்டு, அப்பதவியில் ஓபிஎஸ் அமர வைக்கப்படுவார் என்றார்