தென்மாவட்ட மக்களின் குலசாமியான பென்னிகுவிக் - பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்
தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பெரும்பாடுபட்டு தன் சொந்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களை இப்பகுதி மக்கள் மனித கடவுளாக பாவித்து வழிபட்டு வருகின
தேனி: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக்கின் 178 ஆவது பிறந்த நாள் விழா விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொங்கல் வைத்து மாலை அணிவித்து வெகு விமரிசையாகக் கொண்டாடினர். தென் மாவட்ட மக்களின் குலசாமியாக மதிக்கப்படுகிறார் பென்னிகுவிக்.
முல்லைப்பெரியாறு அணைக்காக தன் உழைப்பையும், சொத்தையும் கொட்டி உருவாக்கிய பென்னிகுவிக் தென் தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறார். ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளை பொங்கல் வைத்து படைத்து வழிபடுகின்றனர். இந்த ஆண்டு பென்னிகுவிக் 178 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொங்கல் வைத்து மாலை அணிவித்து வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.
கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 178 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன்,தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஜெ.தீபா உள்ளிட்டோர் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பென்னிகுவிக்கிற்கு மரியாதை
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் மற்றும் தேனி உட்பட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கை நினைவு கூறும் விதமாக தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி அவரது சிலைக்கு மற்றும் திருவுருவப்படத்திற்கு ஆங்காங்கே மாலை அணிவித்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
அணைகட்டியவருக்கு மரியாதை
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது பிறந்த தினத்தன்று கலை நிகழ்ச்சிகள்,பொங்கல் வைத்து வழிபாடு உள்ளிட்டவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதராக செய்து காட்டினார். அதனால்தான் தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் கட்டி தனது நன்றியை திருப்பி செலுத்தியிருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் அவருக்காக ஒரு மணிமண்டபம் கட்டினார்.
பென்னிகுவிக்கிற்கு மரியாதை
இந்த மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அவரது பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் ஆகிய தினங்களில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவரது பிறந்த தினமான ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை முதலே இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மணிமண்டபம் வருகை தந்து பொங்கல் வைத்து அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஜெ.தீபா மரியாதை
அரசியல் கட்சி பிரமுகர்களான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையிலான கட்சியினர் மற்றும் அஇஅதிமுக கட்சியின் சார்பில் தேனி லோக்சபா உறுப்பினர் பார்த்திபன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் மற்றும் எம்ஜிஆர் தீபா பேரவை ஜெ தீபா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் விவிமு மற்றும் பாஜக கட்சியினர் ஆகியோர் ஜான் பென்னிகுவிக்கின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சாமியான பென்னிகுவிக்
தென் மாவட்டங்களில் பென்னி குவிக் என்பது வெறும் பெயரல்ல, தமிழக மக்களின் வணக்கத்துக்குரிய ஒரு காவல் தெய்வத்தின் பெயர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்தவர்களை சாமிக்கு சமமாக வைத்துப் போற்றும் மதுரை மண், அந்த மண்ணுக்காக தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஒரு வெள்ளைக்காரரை குலம் தழைக்க வரம் கொடுத்த சாமியாகவே மதித்து பொங்கல் வைத்து கும்பிடுகின்றனர்.