தென்மாவட்ட மக்களின் குலசாமியான பென்னிகுவிக் 180வது பிறந்தநாள்: ஓ.பி.எஸ், விவசாயிகள் மரியாதை
முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 180வது பிறந்த தினத்தை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பென்னிகுவிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள் மரியாதை செலுத்தினர
தேனி: தென் மாவட்ட மக்களின் குலசாமியாக வணங்கப்படும் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின்180வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. லோயர் கேம்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பென்னிகுவிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அதிகாலை முதலே இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் மணிமண்டபத்திற்கு வருகை தந்து பொங்கல் வைத்து படையலிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Recommended Video
நாளை முதல்.. நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்.. பிரதமர் மோடி துவங்கி வைப்பு!
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் மற்றும் தேனி உட்பட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கை நினைவு கூறும் விதமாக தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி அவரது சிலைக்கு மற்றும் திருவுருவப்படத்திற்கு ஆங்காங்கே மாலை அணிவித்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது பிறந்த தினத்தன்று கலை நிகழ்ச்சிகள்,பொங்கல் வைத்து வழிபாடு உள்ளிட்டவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதராக செய்து காட்டினார். அதனால்தான் தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் கட்டி தனது நன்றியை திருப்பி செலுத்தியிருக்கிறது.
பென்னிகுவிக்கின் 180வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மணிமண்டபத்திற்கு வருகை தந்து பொங்கல் வைத்து அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பென்னிகுவிக் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் எம்.பி, கலெக்டர் பல்லவிபல்தேவ், ஜக்கையன் எம்.எல்.ஏ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தென் மாவட்டங்களில் பென்னி குவிக் என்பது வெறும் பெயரல்ல, தமிழக மக்களின் வணக்கத்துக்குரிய ஒரு காவல் தெய்வத்தின் பெயர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்தவர்களை சாமிக்கு சமமாக வைத்துப் போற்றும் மதுரை மண், அந்த மண்ணுக்காக தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஒரு வெள்ளைக்காரரை குலம் தழைக்க வரம் கொடுத்த சாமியாகவே மதித்து பொங்கல் வைத்து கும்பிடுகின்றனர். இன்றைய தினம் சுருளிபட்டி, பாலார்பட்டி பகுதியில் முல்லைபெரியாறு கரையோரங்களில் வசிக்கும் கிராமமக்கள் பொங்கல் வைத்து பென்னிகுவிக்கிற்கு நன்றியை தெரிவித்தனர்.