தேனியில் காங்கிரஸ் பேரணிக்கு தடை விதித்த போலீஸ்... கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி..!
தேனி: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தடையை மீறி பேரணி நடத்த முயன்றதால் போலீஸார் அவரை கைது செய்தனர்.
உழவன் உரிமை மாநாடு என்ற பெயரில் புதிய விவசாய சட்டங்களை கண்டித்து தேனியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று மாநாடு மற்றும் பேரணி நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா செய்திருந்தார்.
இன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவிருந்த நிலையில் காங்கிரஸ் கொடி கட்டிய வாகனங்களை போலீஸ் திருப்பி அனுப்புவதாக கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியிருந்தார். தேனி மாவட்ட எஸ்.பி.யை தொலைபேசியில் அழைத்து உரிய அறிவுரை வழங்குமாறு தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறைச் செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
போலீஸ்காரர்களால் 20 வயது இளம் பெண் 10 நாட்கள் லாக்கப்பில் இரவு பகலாக கதற கதற பலாத்காரம்.. ஷாக்
இந்நிலையில் போலீஸ் தடையை மீறி டிராக்டர்களில் விவசாய சட்டங்களை கண்டித்து பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸ் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் அமர்ந்ததால் தேனி-கம்பம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா, உள்ளிட்ட நிர்வாகிகளை போலீஸ் கைது செய்தது. இதனிடையே நேற்று முன் தினம் அதிமுக 49-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இதே தேனியில் அதிமுகவினர் பெரியளவில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி தந்த போலீஸ் தங்களுக்கு அனுமதி தர மறுப்பது ஏன் என கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.
காங்கிரஸ் நடத்தும் உழவன் உரிமைப் பேரணியை கண்டு அதிமுக அஞ்சவேண்டிய அவசியம் என்ன வந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் தனியார் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டுள்ள நிலையில் மாலை விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை கைது செய்ததற்காக தமிழக அரசுக்கு அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கைது நடவடிக்கைக்கு அஞ்சி விவசாய சட்டங்கள் விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு போதும் பின்வாங்காது எனக் கூறியிருக்கிறார்.