பொங்கலோ பொங்கல்... இது நட்புப்பொங்கல் - தேனியில் சுவாரஸ்ய பொங்கல் கொண்டாட்டம்
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1985 முதல் 88 வரை படித்த பள்ளி தோழர்கள் ஒன்றாக இணைந்து அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடியது அனைவரும்
தேனி: எத்தனையோ பொங்கல் பண்டிகைகளை பார்த்திருப்போம். சூரியனுக்கு பொங்கல், மாட்டுப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்திருந்தாலும் தேனி மாவட்டத்தில் பள்ளி கால நட்புக்களுடன் இணைந்து கொண்டாடிய பொங்கலை மறக்கவே முடியாது. உற்சாகமாக பழைய நினைவுகளை அசைபோட்டபடி ஆனந்தமாக பொங்கல் கொண்டாடியுள்ளனர் ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 88ஆம் ஆண்டு வரை படித்த பள்ளி தோழர்கள் தற்போது பல்வேறு பணிகளில் உள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், விவசாயிகள்,தொழில் அதிபர்கள், பத்திரிகையாளர்கள்
மற்றும் மருத்துவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என்று பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒரே வகுப்பறையில் படித்த இவர்கள் பணியின் காரணமாக பல்வேறு ஊர்களில் பல்வேறு மாநிலங்களில் பிரிந்து வசித்து வந்தாலும் அனைவரும் அலாய் மேட்ஸ் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கி அந்தக் குழுவின் மூலம் இணைந்துள்ளனர்.
நண்பர்களின் அறக்கட்டளை
அலாய்மேட்ஸ் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி தங்களது ஊதியத்தின் ஒரு பகுதியை அந்த அறக்கட்டளை மூலம் சேமித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். பணிச்சுமை காரணமாக நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் இருந்த போதும் இந்த ஆண்டு ஒன்றாக இணைந்து பொங்கல் விழாவை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்தத் திட்டமிடலும் நேரில் சந்திக்காமல் வாட்ஸ் அப் மூலமாகவே நடைபெற்றது.
நண்பர்கள் சந்திப்பு
திட்டமிட்டது போலவே இந்த ஆண்டு அனைத்து நண்பர்களும் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் ஒன்றாக கூடி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்த பலரும் பழைய நினைவுகளை அசைபோட்டு பேசி மகிழ்ந்தனர்.
பசுமையான நினைவுகள்
ஒருவருக்கு மற்றவர் தங்களது குடும்பத்தினரையும் குழந்தைகளையும் அறிமுகம் செய்து வைத்தனர்.நண்பர்கள் அனைவரும் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்தும் அவர்களது இல்லத்தரசிகள் சேலை அணிந்தும் பொங்கலைக் கொண்டாடினர்.
ஆட்டம் பாட்டம் அமர்களம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று பல்சுவை நிகழ்ச்சிகளுடன் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி என்று அந்த இடமே களைகட்டியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒருவர் விறகு அடுப்பில் பொங்கல் சமைத்ததும் அரசு வழக்கறிஞர் ஒருவர் ஓடி ஓடி பரிமாறியதும் நட்பின் அருமையை அனைவருக்கும் உணர்த்தியது.
இணைத்த பொங்கல் விழா
பொதுவாக திருவிழாக்கள் நடத்துவது அனைத்து உறவுகளையும் ஒன்றாக இணைப்பதற்கு என்று கூறுவார்கள் அதற்கும் ஒரு படி மேலாக அனைத்து நட்புகளையும் ஒன்றாக இணைத்தது என்று சொல்லலாம். இந்த பொங்கல் பண்டிகை விழாவில் 83 பேரில் 65 பேர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். சமீபத்தில் வெளியான 96 படத்தை இன்றைய தலைமுறையினர் ரசித்து பார்க்கின்றனர். அதே பாணியில் இன்றைக்கு பல மாணவர்கள் விழா கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.