ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன்னு அவரே சொல்லிட்டாரு.. இவங்க பாருங்க வில்லனு சொல்றாங்க!
தேனி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டுவின் வில்லன் விமர்சித்து அவரது சொந்த மாவட்டமான தேனியின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு நாயகன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காளை படம் பொறித்த போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. "காளை மாடு வளர்ப்புச் சட்டம் - 2019 கொண்டுவந்த ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு நாயகரல்ல, ஜல்லிக்கட்டு வில்லன்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்த அந்த போஸ்டர்கள், நாட்டுமாடு நலச்சங்கம் சார்பில் ஒட்டப்பட்டிருந்தன.
நாட்டு மாடுகள்
போஸ்டரில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசினோம். கலைவாணன் என்பவர் நம்மிடையே பேசினார்.
"நாட்டு மாடுகளை அழிக்கும் வேலையைதான் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம் - 2019 என்பது தான் அந்தச் சட்டத்தின் பெயர். அந்தச் சட்டம் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அச்சட்டத்தில் மாடுகளை கருவுற சினை ஊசிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள்
காளை மாடுகள் வளர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அந்தச் சட்டம் இயற்றப்பட்டால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக் கூட தமிழகத்தில் காளைகள் இருக்காது. இப்படி ஒரு சூழல் இருக்கும் போது, தமிழகத்தின் துணைமுதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு வில்லன்
சட்டம் தரும் விளைவுகளை அறிந்த நாங்கள், அவரை ஜல்லிக்கட்டு வில்லன் என்கிறோம். இதில் என்ன தவறு... என்றார் அவர். போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக, தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாட்டுமாடு நலச் சங்கத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
மதுரை
தமிழ்நாடு கால்நடை இனப் பெருக்கச் சட்டம் - 2019 தொடர்பாக, தமிழகம் முழுவதிலும் உள்ள ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போர், நாட்டுமாடு ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதனை அடுத்தே, தேனியில் ஓ.பி.எஸ்ஸுற்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் ஓபிஎஸ்ஸை, ஜல்லிக்கட்டு நாயகன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.