காரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. வன்முறையை தூண்ட முயற்சியென ரவீந்திரநாத் எம்பி கண்டனம்
தேனி: தனக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி காரை சுற்றி வளைத்து தாக்கியவர்கள் வன்முறையை தூண்ட முயற்சித்ததாக ரவீந்திரநாத் எம்பி, கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் சென்ற போது இஸ்லாமிய அமைப்பினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது ரவீந்தரநாத் குமாரின் கார் மீதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியே தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக தேனி எம்.பி அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கம்பம் பகுதியில் சில உள்ளூர் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர் ரவீந்திரநாத் காரை தாக்க முயற்சி செய்தனர். அவர்கள் அதிமுகவிற்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
அமைதியான தேனி மாவட்டத்தில் அமைதியின்மையை உருவாக்கி, வன்முறையை தூண்டுவதற்காக மேற்கண்ட நபர்களுக்கு எம்.பி.ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.