ஆண்டிபட்டியில் ரூ.1.48 கோடி பிடிபட்ட வழக்கு... முதல் குற்றவாளியான செல்வம் திரையரங்கில் கைது
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1.48 கோடி பணம் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முதலாவது குற்றவாளியும், அமமுக மாவட்ட மாணவரணி செயலாளருமான வழக்கறிஞர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு போடியில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸை கண்டவுடன் நெஞ்சு வலி என்று கூறிய செல்வத்தை உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதனையடுத்து செல்வத்தை, பரிசோதித்ததில் ஆரோக்யமாக இருப்பதாக மருத்துவர் அறிக்கை கொடுத்ததின் பேரில், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கு.. பொய்யான செய்திகள் வலம் வருவதாக நீதிமன்றம் வருத்தம்!
ரூ.1.48 கோடி பறிமுதல்
ஆண்டிப்பட்டியில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி அமமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சுமார் 150க்கும் மேற்பட்டோர் பறக்கும் படையினருடன் தகராறு செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
பணத்துடன் ஓட்டம்
அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டதால் பதட்டம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக போலீசாருடன் தகராறு செய்து கொண்டிருந்த 150க்கும் மேற்பட்டோர் அங்கு போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த பணக்கட்டுகளில் ஆளாளுக்கு கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர். அவர்கள் எடுத்துக் கொண்டு ஓடிய பணத்தின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வழக்குப் பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட நிலையில், பறக்கும் படை அதிகாரி நடராஜரத்தினம் அளித்த புகாரின் பேரில் வேட்பாளர் ஜெயக்குமார் உட்பட 150க்கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியரைத் தாக்குதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரைத் தாக்கி கொள்ளையடித்தல், ஆபாசமாகப் பேசுதல், அனுமதியின்றி கூடுதல் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தியேட்டரில் கைது
இந்த வழக்கில் முதலாவது குற்றவாளியான அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செல்வம் என்பவரும், ஆண்டிபட்டி பேரூர் அமமுக செயலாளர் பொன்.முருகன் என்பவரும் தலைமறைவாகிவிட்டனர்.பொன்.முருகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் நேற்று இரவு வழக்கறிஞர் செல்வம் போடியில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் படம் பார்த்துக்கொண்டிருந்த செல்வத்தை தியேட்டருக்குள்ளேயே போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
போலீஸார் கைது செய்த போது வழக்கறிஞர் செல்வம் நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் செல்வம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கையின் பேரில் செல்வம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே பழனி, சுமன் ராஜ், பிரகாஷ்ராஜ், மற்றும் பிரபு, பொன்.முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.