இப்ப உடைச்சிரு பாப்பா பானையை.. சொந்த ஊரில் மாட்டு வண்டி ஓட்டி கலக்கிய ஓபிஎஸ்!
தேனி: தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.
Recommended Video
தனது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நின்ற படி பயணம் செய்ய, ஓ பன்னீர்செல்வம் மாட்டு வண்டியை ஓட்டினார்.
மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமான முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல்ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் இன்று தேனி மாவட்ட மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
மலர்களால் அலங்காரம்
இன்று அவரது 180-வது பிறந்தநாளையொட்டி லோயர்கேம்பில் உள்ள மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டது. அவரது முழுஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அதன் முன்னால் ஜான்பென்னிகுவிக் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
ஜான்பென்னிகுவிக் மரியாதை
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜான்பென்னிகுவிக் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் எம்.பி, தேனி மாவட்ட ஆட்சி தலைவர் பல்லவி பல்தேவ், ஜக்கையன் எம்.எல்.ஏ, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
ஓபிஎஸ் பங்கேற்பு
இதனிடையே தேனி மாவட்டம் கம்பம் அருகே பாலார்பட்டியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி, தேனி மாவட்ட ஆட்சி தலைவர் பல்லவி பல்தேவ், ஜக்கையன் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வைரலாகும் படம்
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாட்டு வண்டியை ஓட்டியபடி வீதி உலா வந்தார். ஓபிஎஸ் மாட்டு வண்டி ஓட்ட, அவரது மகன் ரவீந்திரநாத் எம்பி, மற்றும் எம்எல்ஏ ஜக்கையன் ஆகியோர் மாட்டு வண்டியில் நின்றிருந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.