தங்கத்துடன் மல்லுக்கட்டு.. ஆண்டிபட்டியில் அதிமுகவில் போட்டியிட கடும் போட்டி!
தேனி: எம்ஜிஆர்,ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களை தந்த தொகுதியான ஆண்டிபட்டியில் இந்த முறை திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. தேனி மாவட்ட துணை செயலாளராக இருக்கும் முருக்கோடை ராமர் களம் இறக்கப்படலாம் என்று அவருக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா என இரண்டு பெரும் அதிமுக தலைவர்கள் வெற்றி பெற்றார்கள். முதல்வராகவும் இருந்தார்கள். இந்த தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டையாக இருந்துள்ளது. அதேநேரம் 1996ம் ஆண்டில் இங்கு திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு தற்போது கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது
கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஆண்டிபட்டி, பெரியகுளம், அரூர், நிலக்கோட்டை உள்பட 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 9 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியை தக்கவைத்தது. அதேநேரம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம் உள்பட 11 தொகுதிகளில் திமுக வென்றது
மகாராஜன் வெற்றி
ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் மகாராஜன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அவரது சகோதரர் லோகிராஜன் போட்டியிட்டார். அமமுக சார்பில் ஜெயக்குமார் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட மகாராஜன் 81772 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது சகோதாரரும் அதிமுக வேட்பாளருமாகிய லோகிராஜன் 71480 வாக்குகள் பெற்றார். அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் 26978 வாக்குகள் பெற்றார். அமமுக வாக்குகளை பிரித்த காரணத்தால் அதிமுக தோல்வியை தழுவியது. 10292 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஆண்டிபட்டியில் வெற்றி பெற்றது.
தங்கதமிழ்ச்செல்வன்
இந்த சூழலில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் தேனி மாவட்டத்தில் அரங்கேறின. அமமுகவில் முக்கிய தலைவராக திகழ்ந்த தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இப்போது தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தங்கதமிழ்ச்செல்வன் பொறுப்பில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வனே போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது.
தங்கத்துடன் மோதல்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வின் மகாராஜன் மீண்டும் போட்டியிடவும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் ஒரு செய்திகள் உள்ளன. இந்த சூழலில் லோகிராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. முருக்கோடை ராமரை அதிமுக சார்பாக நிறுத்த வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள் . முக்குலத்தோர் உள்பட அனைத்து சாதியினர் வாக்குகளையும் அதிக அளவில் கவர அவரால் முடியும் என அவருக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் சிலர் சொல்கிறார்கள்.
சரியான தேர்வு?
இதுபற்றி அவர்கள் கூறும் போது, தேனி மாவட்ட துணை செயலாளராக இருக்கும் ராமரை ஆண்டிபட்டியில் நிறுத்தினால் கடும் போட்டி இருக்கும் . தங்கத்தமிழ்செல்வன் Vs முருக்கோடை ராமர் என்று போட்டி வந்தால் ஆண்டிப்பட்டி களைகட்டும். ஏற்கனவே இருவருக்குமான போட்டி தேனி மாவட்டத்தில் மிகப்பிரபலம். அன்றே இவர்களின் பிரச்சனை ஜெயலலிதா வரை சென்றிருக்கிறது என்கிறார்கள்