ஆணவமாக பேசினாரு ஓபிஎஸ் மகன்...அதனால தேனியில் நின்றேன்...தங்க தமிழ் செல்வன்
தேனி: தேனியில் அமமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முதல் நாள், ஓபிஎஸ் மகன் ஆணவமாக பேசினார். அதனால் தேனி தொகுதியில் எம்பி வேட்பாளராக நானே நிற்க வேண்டும் என முடிவு செய்தேன் என தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மகன் ஓ.ப. ரவீந்திர நாத்தும், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வனும் களத்தில் இருக்கிறார்கள்.
ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த தங்க தமிழ் செல்வன், தினகரனுக்கு ஆதரவு அளித்ததோடு, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் 18 எம்எல்ஏக்களில் ஒருவராக புகார் மனு அளித்தார். இதையடுத்து தங்க தமிழ் செல்வனுடன் சேர்ந்து 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர், துபாயை போன்று சென்னையை மாற்றுவோம்... பாமக வேட்பாளர் சாம்பால் பிரச்சாரம்
தேனியில் போட்டி
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வததின் மகன் ப.ரவீந்திர நாத் குமார் அறிவிக்கப்பட்டார். அப்போது தினகரன், தேனியில் அமமுக சார்பில் தேவைப்பட்டால் நானே நிற்பேன் என கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அமமுக வேட்பாளர்
இந்நிலையில் அமமுக சார்பில் ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏவாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தங்க தமிழ் செல்வன், அக்கட்சியின் சார்பில் தேனி மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
தேனியில் போட்டி
தங்க தமிழ் செல்வன் ஆண்டிபட்டியை விட்டுவிட்டு தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, இதனை அவரிடம் நேராகவே கேட்டது. அதற்கு பதில் அளித்த தங்க தமிழ் செல்வன், "சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என்று சொன்னேன். கடைசி நேரத்தில் மக்களை தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிலை வந்தது, அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.
ஓபிஎஸ் மகன்
அதன் பின்னணி என்று சொன்னால், தேனியில் நிற்கும் ஓபிஎஸ் மகன் ஆணவமான பேச்சு பேசினார். 'ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எனக்கு பெரிதல்ல. அவர் (தினகரன்) சுயேட்டை சின்னத்தில் நிற்கிறவர், அதெல்லாம் பொருட்டே கிடையாது. எத்தனையோ பேர் இங்கு தோற்றுள்ளார்கள். நான் பாஜக கூட்டணியில் இங்கு நிச்சயம் ஜெயித்துடுவேன். என்கிட்ட எல்லா பலமும் இருக்கிறது' என்கின்ற ஒரு ஆணவமான பேச்சை தேர்வு செய்வதற்கு முதல் நாள் நான் கேட்டேன்.
முடிவு செய்தேன்
இதனால் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட வேண்டும் என நானே முடிவு செய்தேன். என் முடிவினை டிடிவி தினகரன் ஏற்றுக்கொண்டார். ஆண்டிபட்டியை விட்டுவிட்டு தேனியில் போட்டியிடுவதால் எந்த பின்னடைவும் இல்லை. எங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான். அதிமு க போட்டியில் இல்லை" என்றார். மேலும் அதிமுக ரூ.5000 வரை ஓட்டுக்கு கொடுப்பதாகவும் தங்க தமிழ் செல்வன் குற்றம்சாட்டினார்.