மாற்றான் தோட்டத்து மல்லிகை.. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக மணக்க போகும் தங்கம்?
Recommended Video
சென்னை: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை கூறிவிட்டு திமுகவில் இணைந்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். தனது திறமையை பார்த்துவிட்டு கட்சியே சிறந்த பொறுப்பு தமக்கு அளிக்கும் என நம்பும் தங்கத்துக்கு தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று அரசியலில் முக்கியமான நிகழ்வு என்றால் அது தங்க தமிழ்ச்செல்வன் திமுகவி சேர்ந்ததுதான். அரசியல் நிரந்த நண்பனும் இல்லை. நிரந்த பகைவனும் இல்லை என்று சொல்வார்கள். அது அடிக்கடி உண்மையாகி வருகிறது.
நேற்று வரை கேவலமான வார்த்தைகளால் விமர்சனங்கள் செய்து சண்டை போட்டவர்கள் இன்று ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பார்கள். இதை நடிகர் கவுண்டமணி ஸ்டைலில் சொல்வதென்றால் அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்று சொல்லி சாப்டரை குளோஸ் செய்துவிடுவார்கள்.
தேனி மாவட்ட திமுகவுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கும் 'தங்கத்தின்' வருகை
தப்பிய தங்கம்
அப்படித்தான் திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் தன்னை நோக்கி செய்தியாளர்கள் எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு லாவகமாக பதில் அளித்தார். அப்போது அவரிடம் திமுகவில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும் என நம்புகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
மாற்றான் தோட்டத்து மல்லிகை
அதற்கு பதில் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், என்னுடைய திறமையை பார்த்து தளபதி ஸ்டாலின் அவர்களே பொறுப்பு கொடுப்பார்கள் என்றும் பதவியை எதிர்பார்த்து சேரவில்லை என்றும் கூறினார். மாற்றான் தோட்டத்து மல்லிகை என தன்னை பற்றி கூறிக்கொண்ட தங்கம் ஸ்டாலின் தான் மக்களை காப்பாற்ற போராடுவதாவும் அதனால் திமுகவில் இணைந்ததாகவும் கூறினார்.
திறமையை காட்ட முடிவு
சரி இப்போது விஷயத்துக்கு வந்துவிடுவோம். .மேற்படி விஷயத்தை எழுத காரணம், ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் தேனி மாவட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு சமமாக அரசியலில் கோலோச்சியவர் தங்க தமிழ்செல்வன் அதனால் தான் அவர் தன்னை மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று குறப்பிடுகிறார். அவர் சொல்வது போல் திறமையை காட்டி வென்று, அதற்கு பரிசாக திமுக தேனி மாவட்ட பொறுப்பாளர் பதவியை பெற்றுவிட வேண்டும் என விரும்புகிறார்.
தங்கத்துக்கு சூப்பர் பொறுப்பு
இதனிடையே திமுக வட்டாரத்தில் விசாரித்த வரையில், தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவில் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பை செந்தில் பாலாஜிக்கு வழங்கினார். அந்த பாணியில் தங்கத்துக்கும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.
அதிமுகவின் கோட்டை
அதிமுகவின் கோட்டையான தேனி மாவட்டத்தில் திமுகவால் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலம் வரை பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. தேனியில் சரியான வெற்றியை பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு இதுவரை இல்லாமல் இருந்து வருவதை அறிந்த திமுக தலைமை, முன்னதாக தேனி மாவட்ட திமுக தலைமை பொறுப்பில் இருந்த மூக்கையாவை மாற்றிவிட்டு ஜெயக்குமார் என்பவரை நியமித்தது.
மாவட்ட பொறுப்பாளர் பதவி
ஆனால் அவராலும் வெற்றியை பெற்றுத்தரமுடியவில்லை. இதனால் அவருக்கு பதில் கம்பம் ராமகிருஷ்ணன் தற்போது தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஒபிஎஸ்க்கு சமமாக தேனி மாவட்டத்தில் அதிமுகவில் அரசியல் செய்து வந்த தங்க தமிழ்ச்செல்வன் இப்போது திமுகவில் இணைந்து இருப்பதால் அவருக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இதன் மூலம் தேனிமாவட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அதிமுகவை எதிர்த்து வலிமையான அரசியலை இனி செய்ய முடியும் என திமுக தலைமை நம்புகிறது.