இறந்தவருக்கு பால் ஊற்ற போனபோது.. சூழ்ந்து தாக்கிய தேனீக்கள்.. விஷம் ஏறி ஒருவர் பலி.. 20 பேர் காயம்
தேனி: தேனி அருகே இறந்தவருக்கு பால் தெளிக்கும் சடங்கு செய்வதற்காக மயானத்திற்கு சென்றவர்களை தேனீக்கள் தாக்கியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
Recommended Video
இந்த சம்பவத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் தேனி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. 73 வயதான இவர், உடல் நலக்குறைவால் சனிக்கிழமை இயற்கை எய்தினார்.
மயானம்
அதனைத் தொடர்ந்து நேற்று அவரது உடல் கோடாங்கிபட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இறந்த சீதாலட்சுமிக்கு பால் தெளிக்கும் சடங்கு செய்வதற்காக இன்று காலை உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர்.
பால் ஊற்ற சென்றனர்
அப்போது மயானத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து படையெடுத்த ராட்சத தேனீக்கள் அங்கிருந்தவர்களை தாக்கியது. தேனீக்கள் தாக்கியதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் இறந்த சீதாலட்சுமியின் சகோதரி மகனான பெயின்டர் வேலை பார்த்து வந்த ராஜா (40) என்பவர் மேல் சட்டை இல்லாமல் இருந்ததன் காரணமாக நூற்றுக்கணக்கான தேனீக்கள் அவரை சூழ்ந்து கடுமையாகத் தாக்கியது.
சகோதரி மகன் பலி
தேனீக்கள் படையெடுத்ததன் காரணமாக அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் துவங்கினர். இதில் காயமடைந்த அனைவரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரும் சோகம்
சனிக்கிழமை இறந்தவருக்கு சடங்கு சம்பிரதாயம் செய்ய சென்றவர்களை இன்று தேனீக்கள் தாக்கியதால், ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.