14 வயதில் கல்யாணம்.. 19 வயதில் கொடூர கொலை.. தேனியில் கர்ப்பிணியை கொன்ற கணவனுக்கு சாகும் வரை தூக்கு!
தேனி: ஆறு மாத கர்ப்பிணி மனைவியை வயிற்றில் தாக்கியும், தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொடூரமாக கொலை செய்தவரை சாகும் வரை தூக்கிலிடுமாறு தேனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
Recommended Video
தேனி மாவட்டம், சின்னமனூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (36). இவரது மனைவி கற்பகவள்ளி (19). கற்பகவள்ளிக்கு 14 வயது இருக்கும் போதே திருமணம் செய்திருக்கிறார் சுரேஷ். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சுரேஷ், ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவராக கடந்த 2011-16வரை இருந்துள்ளார்.. 2015ல் கற்பகவள்ளி 3வது முறையாக கர்ப்பமுற்று ஆறு மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இவரது கர்ப்பத்தில் சந்தேகமடைந்த சுரேஷ், அடித்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
அடி வயிற்றில் காயம்
இந்நிலையில் கடந்த 2015, ஜூலை 21ம் தேதி மதியம் வீட்டில் கற்பகவள்ளியிடம் வழக்கம்போல், சுரேஷ் தகராறு செய்திருக்கிறார். மார்பில் சிகரெட்டால் சூடு வைத்து, அடி வயிற்றில் கையால் குத்தி காயப்படுத்தி இருக்கிறார்.
சிசு இறந்தது
இதில் கற்பகவள்ளியின் கர்ப்பப்பை சேதமடைந்து சிசு இறந்தது. ஆத்திரம் தீராத சுரேஷ், கற்பகவள்ளியின் தாலிக்கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கு விசாரணை
இதுகுறித்து கற்பகவள்ளியின் தந்தை நல்லதம்பி அளித்த புகாரின் பேரில் , சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிந்து சுரேசை கைது செய்தார்கள். இவ்வழக்கின் விசாரணை தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி A.அப்துல் காதர் முன்பு நடந்து வந்தது. வழக்கு விசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்தது.
தூக்கு தண்டனை
நீதிபதி அப்துல் காதர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ‘‘14 வயதில் கற்பகவள்ளியை திருமணம் செய்து, 19 வயதில் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தவரை கொடூரமாக கொலை செய்ததோடு, சிசு உயிரிழப்புக்கும் காரணமாக இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளி சுரேஷை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்'' என நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.