தேனியில் வெளுத்து வாங்கிய மழை...நிரம்பி வழியும் அணைகள்
தேனி : தேனி மாவட்டத்தில் சமீபத்தில் தொடர்ந்து பெய்த மழையால் வைகை அணை உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி விட்டின.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி, இந்த மாத துவக்கம் வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெய்த மழையால் பல அணைகள் நிரம்பியதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஏரிகள், கண்மாய்கள் பலவும் தூர்வாரப்பட்டிருந்ததால் அவைகளும் நிரம்பி உள்ளன. இதனால் இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இருந்த போதிலும் தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மிக குறைந்த அளவிலேயே உயர்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.
வைகை அணை முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. சோத்துப்பாறை அணை, சண்முகநதி அணை ஆகியன நிரம்பி விட்டன. இதனால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணைகள் நிலவரம் :
இன்று காலை நேர நிலவரப்படி, வைகை அணையின் நீர்மட்டம் 69.64 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி. 142 அடி கொண்ட முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.85 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணை, முழு கொள்ளளவான 57 அடியை எட்டி உள்ளன. 126.28 அடி கொள்ளளவை கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 52.55 அடி கொள்ளளவை கொண்ட சண்மகநதி அணை 52.50 அடியாக உள்ளது.