ஏற்கனவே அவிங்க பஞ்சாயத்து.. நடுவுல இது வேற.. தேனியில் இப்படி சிக்கிட்டாரே ஈவிகேஎஸ் இளங்கோவன்
Recommended Video
தேனி: தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சி மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஏற்கனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், அமமுக சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வன் என பிரபலங்கள் களமிறங்கியதால் களை கட்டிய தேனி தொகுதி, இளங்கோவன் வருகையால் விஐபி தொகுதியானது.
இந்த நிலையில், இளங்கோவனுக்கு பெரும் தர்ம சங்கடத்தை அவரது கட்சியே கொடுத்து வருகிறது.
முல்லைப் பெரியாறு
கேரள எல்லையோர, தேனி மாவட்டத்தை பொறுத்தளவில் ஜீவாதார பிரச்சினை என்பது முல்லைப் பெரியாறு அணை விஷயம்தான். ஆனால், காங்கிரஸ் கட்சியோ, தமிழக எல்லைக்கு அந்த பக்கம் கேரளாவில், பெரியாறு அணை பிரச்சினையில் கேரளாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்போம் என்றும், இந்த பக்கம் தேனியில் தமிழகத்திற்கு ஆதரவாக முடிவெடுப்போம் என்றும் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது.
அனிதா ஞாபகம் இருக்கா.. ஜெ. எப்படி இறந்தார்னு தெரியுமா.. இவங்களுக்கு தண்டனை வேணாமா.. உதயநிதி கேள்வி
இரண்டுக்கும் ஓகே
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தி, 152 அடிக்கு நீர் தேக்க வேண்டும் என்பது தமிழக அரசு நிலைப்பாடு. அணையையே உடைத்துவிட வேண்டும். புதிய அணை கட்டுவோம் என்பது கேரளா நிலைப்பாடு. ஆனால், இரண்டையும் செய்து முடிப்போம் என்று காங்கிரஸ் சார்பில் இரு பக்கமும் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதுதான் அவல நகைச்சுவையாக உள்ளது.
இடுக்கி, தேனி தொகுதிகள்
2014 தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியா கோஸ் மீண்டும் இம்முறை இடுக்கி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தபக்கம் தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இப்படியாக ஒரு இடியாப்ப சிக்கலில் காங்கிரஸ் சிக்கியுள்ளது. மாற்றி மாற்றி அந்த பக்கமும் இந்த பக்கமும் அதன் தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது.
தேனி ஜீவாதாரம்
பெரியாறு அணை பிரச்னை உணர்வுப்பூர்வமானது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனி மாவட்ட மக்கள் திரண்டு, கேரள எல்லையை முற்றுகையிட்டு தன்னெழுச்சி போராட்டத்தை நடத்தினர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியான சூழலில் காங்கிரசின் இரட்டை பேச்சு, இளங்கோவனுக்குதான் பின்னடைவாக அமையும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏற்கனவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதால், கேரளாவின் கைதான் நதிநீர் விஷயங்களில் ஓங்கும் என்ற அச்சமும் முல்லைப் பெரியாறு தண்ணீரை நம்பியுள்ள தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.