செம்ம.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. தேனி உழவர் சந்தையில் ரூ.150க்கு விற்கப்படும் 18 காய்கறி தொகுப்பு
தேனி: தேனி புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் உழவர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ரூ.150க்கு பலவகையான காய்கறி தொகுப்பு விற்கப்படுவதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பால் விற்பனைக்கடைகள் திறந்திருக்கலாம் என்றும் ஆனால் அதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் பலர் காய்கறிகளை வாங்குவதற்கு உழவர் சந்தையை அதிகம் விரும்புகிறார்கள். இதனால் உழவர் சந்தைகள் எப்போதுமே கூட்டத்தால் நிரம்பி வழியும். தற்போத சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்று யோசித்த மாவட்ட நிர்வாகங்கள், நெருக்கடியான காய்கறி மார்க்கெட்டுகளை பேருந்து நிலையம், மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு தற்காலிகமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில், தேனி உழவர் சந்தை தேனி புதிய பேருந்து நிலையத்திற்குள் மாற்றப்பட்டு உள்ளது. அங்கு மிக விலாசமாக சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றும் வகையில் காய்கறி விற்பனை நடந்து வருகிறது.
மார்ச் 19.. ஒரு பொய்.. கேரளாவில் சின்ன மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா.. காசர்கோட்டை உலுக்கிய கதை!
இந்நிலையில் தேனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனையின்போது விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையிலும், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் உழவர் சந்தை நிர்வாகம், காய்கறி தொகுப்பினை ஒரு பையில் வைத்து விற்று வருகிறது. இப்படி உருவாக்கப்பட்ட, காய்கறி தொகுப்பு ரூ.150க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள காய்கறிகள் விவரம் பின்வருமாறு:
- கத்தரிக்காய் 1/2 கிலோ
- தக்காளி 1 கிலோ,
- வெண்டைக்காய் 1/4 கிலோ
- அவரைக்காய் 1/2 கிலோ
- முருங்கைக்காய் 1/4 கிலோ
- பச்சைமிளகாய் 1/4 கிலோ
- பீன்ஸ் 1/4 கிலோ
- கேரட் 1/4 கிலோ
- உருளைக்கிழங்கு 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் 1/4 கிலோ
- பெரிய வெங்காயம் 1/2 கிலோ
- கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஒரு கொத்து,
- கீரை ஒரு கட்டு,
- சவ்சவ் 1,
- நூக்கல் 1/4 கிலோ
- முள்ளங்கி 1/4 கிலோ
- வாழைக்காய் 3,
- எலுமிச்சை 4
ஆகியவை ரூ.150க்கு இத்தனை காய்கறிகள் இருந்த இடத்திலேயே தேடி அலையாமல் கிடைப்பதால் மக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி வருகிறார்கள்.