ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது.. அது ஓ.பி.எஸ்ஸுக்கும் தெரியும்.. தேனியில் ஸ்டாலின் பரபர!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தேனி திமுக கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேனி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, இது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் தெரியும் என்று தேனி கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்தனர். தேனி வீரப்பாண்டியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் நிகழும் மர்மம் குறித்து அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
என்ன ஆட்சி
திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேச்சில், 200 தொகுதிகளில் திமுக வென்று ஆட்சி அமைக்கும். தற்போதைய தமிழக அரசு கோமா நிலையில் இருக்கிறது. முதல்வராக கருணாநிதி, ஜெ. இருந்த போது நீட் நுழையவில்லை. திமுகதான் அடுத்து ஆட்சிக்கு வரப்போகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சியில் அமர்ந்த உடன் நிறைவேற்றுவோம்.
கொள்ளையடிக்கும்
அதிமுக கொள்ளையடிக்கும் கட்சியாக தற்போது மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் எந்த முதல்வரின் மறைவிலும் இப்படி நிகழ்ந்தது கிடையாது. அண்ணா அவர்கள் கூட முதல்வராக இருக்கும் போதே மறைந்தார். ஆனால் அவரின் உடல்நிலை குறித்து உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இல்லை
ஆனால் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்படி தகவல் வரவில்லை. ஒரு முதல்வருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்க கூடாது. சில அமைச்சர்கள் மட்டும் அம்மா இட்லி சாப்பிட்டார்கள், ஜூஸ் குடித்தார்கள் என்று கூறினார்கள். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று ஓபிஎஸ்தான் கூறினார். நாங்கள் சொல்லவில்லை.
என்ன தர்மயுத்தம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, அம்மா ஆவியுடன் பேசினேன் என்று ஓபிஎஸ்தான் கூறினார். அது அவருக்கே தெரியும். ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டதே அவரால்தான். அந்த கமிஷன் முன் கூட இன்னும் ஓ. பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. அவர்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா என்று யார் குறித்தும் கவலை கிடையாது. அயோக்கியர்களின் தலைமையில் ஆட்சி நடக்கிறது.
பெரிய ஆபத்து
அதிமுக ஆட்சியின் கீழ் தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. தமிழ் மொழிக்கு ஆபத்து வந்து விட கூடாது. தமிழை நாம் எல்லோரும் சேர்ந்து காக்க வேண்டும். கருணாநிதி தமிழ் குறித்து நிறைய கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள், கதைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பை உணர்ந்து அவர் செயல்பட்டார்.
எங்களுக்கு தெரியும்
vஅப்படிப்பட்ட தமிழுக்கு ஆபத்து வந்து விட கூடாது. திமுக எப்போதும் போல அதை தொடர்ந்து செய்யும். பிற கட்சியில் இருந்து திமுகவில் இணைந்து இருக்கும் உங்களின் வருகை எங்களுக்கு பெரிய பலம் சேர்க்கும், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.