பிள்ளையார்பட்டியை தொடர்ந்து பெரியகுளத்திலும் வள்ளுவர் சிலைக்கு அவமரியாதை.. தேனியில் பரபரப்பு
Recommended Video
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வள்ளுவர் சிலைக்கு மர்மநபர்கள் அவமரியாதை செய்து விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக சென்றிருந்தார். அவர் அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. திருவள்ளுவருக்கு காவி உடையும் நெற்றியில் விபூதியும் அணிவித்தது போன்ற புகைப்படத்தை தமிழக பாஜக வெளியிட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமானப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவரை அவமானப்படுத்தியதாக திமுக இலக்கிய அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் சுவர், கம்பிக் கதவு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சிசிடிவியும் அமைக்கப்படுகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் ஒரு சம்பவம் நடந்துவிட்டது. பெரியகுளத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மர்மநபர் ஒருவர் மை பூசி அவமரியாதை செய்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினர், சம்பவ இடத்துக்கு வந்து திருவள்ளுவர் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி, பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.